எந்த மாதிரி படத்துக்கு ‘U’ சர்ட்டிபிகேட் கொடுக்கணும்? : சென்சார் போர்டுக்கு புத்திமதி சொன்ன டைரக்டர்!

Get real time updates directly on you device, subscribe now.

மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் மூத்த நடிகர் ‘டத்தோ’ ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷ், இயக்குநர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், திருமதி கிருத்திகா உதயநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் அறிவழகன் பேசும் போது, எந்த மாதிரியான படங்களுக்கு சென்சார் அமைப்பு யு சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்பது பற்றிப் பேசினார்.

Related Posts
1 of 8

அப்போது அவர் ” இந்த படத்தை நான் பார்த்தேன். ரொம்ப ஆழமான படம். சமூகத்திற்குத் தேவையான படம் என்று நினைக்கிறேன். இன்றைக்கு ஒரு தயாரிப்பாளரைப் பார்த்து கதை சொல்லப்போனால் இந்த படத்துக்கு யு சர்டிபிகேட் கிடைக்குமா இல்லையென்றால் யு/ ஏ சர்ட்டிபிகேட் கிடைக்குமா? என்று தான் முதலில் கேட்கிறார்கள்.

படம் முடிந்து சென்சாருக்கு போய் யு சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டார்கள் என்றால் அங்கேயே படத்தின் வெற்றியை முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் ரசிகர்கள் தான் ஒரு படத்தை வெற்றிபெற செய்யப் போகிறார்கள். இந்த நேரத்தில் நான் சென்சார் போர்டுக்கு வைக்கிற வேண்டுகோள் என்னவென்றால், யு வோ யு/ஏ வோ என்ன சர்ட்டிபிகேட் வேண்டுமென்றாலும் கொடுங்கள். ஆனால் நிசப்தம் மாதிரியான சமூக விழிப்புணர்வோடு, சமுதாயத்துக்குத் தேவைப்படுகிற துணிச்சலான கருத்தை சொல்கிற படங்களுக்கு நிச்சயமாக யு சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

அத்தோடு அந்த மாதிரியான படங்களுக்கு வரி விலக்கும் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் மைக்கேல் அருண் மாதிரியான இளம் திறமைசாலி இயக்குநர்கள் தொடர்ச்சியாக நல்ல படமாக எடுக்க முடியும். இந்த கோரிக்கையை இந்த மேடையில் உங்கள் ஆதரவோடு முன் வைக்கிறேன்.’ என்றார்.

அறிவழகனின் கோரிக்கை நியாயம் என்பதை விட அவருடைய இந்த கருத்து சென்சார் போர்டுக்கு புத்திமதி சொல்வது போல அமைந்திருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.