ரவி தேஜா தமிழில் மிரட்டும் ‘எவன்டா…’
அமோக வெற்றி பெற்ற ‘செல்வந்தன்’, ‘புருஸ்லீ – 2’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் ‘எவன்டா’. தெலுங்கில் வெற்றி பெற்ற ‘பலுபு’ என்ற படத்தின் தமிழ் டப்பிங் தான் இந்த ‘எவன்டா’.
இந்த படத்தில் ரவிதேஜா நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஸ்ருதிஹாசன், அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராய் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தா, ஜெயபிரகாஷ், ஆதித்யாமேனன், பரமாஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.
வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, அருண்பாரதி, திருமலை சோமு, வடிவரசு, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். ராஜு சுந்தரம், பிருந்தா, சேகர் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். ஏ.எஸ்.பிரகாஷ் கலைத் துறையை கவனித்துள்ளார்.
கோனா வெங்கட், கே.எஸ்.ரவீந்திரா ஆகியோர் கதை எழுதியுள்ள இப்படத்தின் திரைக்கதை எழுதி கோபிசந்த் இயக்கியுள்ளார். வசனம் மற்றும் தமிழ் உருவாக்கம் ஏ.ஆர்.கே.ராஜராஜா. வெங்கட்ராவ், சத்ய சீத்தாலா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தின் இணை தயாரிப்பை பத்ரகாளி பிரசாத் கவனித்துள்ளார்.
இப்படம் குறித்து, இப்படத்தை தமிழில் உருவாக்கம் செய்த ஏ.ஆர்.கே.ராஜராஜா படத்தைப் பற்றி கூறுகையில், “இது முழுக்க முழுக்க காமெடி கலாட்ட படம். படம் பார்க்கும் அனைவரும் நிச்சயமாக வயிறு குலுங்க சிரிப்பார்கள். நாயகனுக்கு அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ் தனது மகன் யாரையும் கல்யாணம் செய்ய மறுப்பதால் பிரகாஷ்ராஜே பெண்களிடம் அவரது மகனுக்காக லவ் புரபோஸ் சொல்லி போலீசில் பல முறை அடி வாங்குவார். அப்படி ஒருமுறை காசுக்காக தினமும் பசங்களை ஏமாற்றும் ஸ்ருதிஹாசனிடம் தனது மகனை காதலிக்குமாறு சொல்ல, அவரும் காதலிப்பது போல் நடிக்க இடையில் ஸ்ருதிஹாசனால் பாதிக்கப்பட்ட நாயகனின் நண்பன் ஒருவன் அவளைப் பற்றி அனைத்து உண்மைகளையும் சொன்னதால் ரவிதேஜாவும் காதலிப்பது போல் நடிக்கிறார்.
இதற்கிடையில் வில்லன் கும்பல் பிரகாஷ்ராஜையும் ரவிதேஜாவையும் கொள்ளுவதற்காக ஊரெல்லாம் தேடி வருகிறார்கள். இறுதியில் நாயகன் யாரை திருமணம் செய்தார், வில்லன்கள் எதற்காக அப்பா மகனை தேடி வருகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை” என்று தெரிவித்தார்.