தற்காப்பு கலையில் சாதிக்க விரும்பிய சிறுவர்களுக்கு உதவிய விவேக் – தேவயானி!

வையம் மீடியாஸ் சார்பில் ‘உரு’ படத்தை தயாரித்த வி.பி.விஜி மீண்டும் தானே தயாரித்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘எழுமின்.’
தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதை தான் ‘எழுமின்’.
விஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள்.
வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள்.
இந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைப்படம் எழுமின். ஐந்து சிறுவர்களும் படத்தில் இடம்பெற்ற கடுமையான சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விவேக், தேவயானி உடன் ப்ரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.