பஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’!
‘பென்டாஸ்டிக் பிரைடே'( Fantastic Friday) என்ற தமிழ் குறும்படம் சமீபத்தில் அம்ரிட்சர், பஞ்சாபில் நடந்த குளோபல் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது.
இந்தப்படத்தின் இயக்குனர் மணிமேகலை தமிழ்நாட்டைச் சார்ந்தவர்.இந்தத் திரைப்பட விழாவில் பஞ்சாப் திரைத்துரையினரும், தேசிய விருதுபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இயக்குனர் மணிமேகலையின் கதைத்தேர்வு, மற்றும் அவர் அதைக் கையாண்டு இயக்கிய விதத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நம் சமுதாயத்தில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆழமாக வேரூன்றி இருக்கின்றன மற்றும் அவை எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் குறுக்கிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பவற்றை மெல்லியதாக விளக்குவதாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் நம் எண்ணங்களே நம் செயல்களாக மாறுகின்றன என்ற கருத்தினை ஆழமாக முன் வைக்கிறார்.
மணிமேகலை மானிடவியல் பயின்றவர். நியூயார்க் பிலிம் அகாடமியில் இயக்குனர் பயிற்சி பெற்றவர். இவர் தற்பொழுது முழுநீளப் படத்திற்கான திரைக்கதை எழுதுவதில் ஈடுபட்டுள்ளார்.