விஜய் மில்டனின் ‘கோலிசோடா 2’ வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய இளம் தயாரிப்பாளர்!

‘தப்புத் தண்டா’ படத்தில் நாயகனாக நடித்ததுடன் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்’ சார்பில் அந்தப் படத்தை தயாரித்தார் வி.சத்யமூர்த்தி.
அதன் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து தனது நிறுவனம் சார்பில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தை தயாரித்து வரும் அவர் தற்போது கோடை கொண்டாட்டமாக மார்ச் 29 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள ‘கோலிசோடா 2’ படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
”இன்றைய சமூக வலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது உயர்ந்து கொண்டே போகின்றது. அவர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கு ஏற்றார் போல் தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே வாங்கி விநியோகம் செய்ய ஆசைப்பட்டேன்.
விஜய் மில்டனின் படங்கள் யாவும் தொழில் நுட்பத்திலும், கதைக்களத்திலும் வலுவானதாக இருக்கும். அதனால் தான் அவர் படங்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. அதனால் தான் அவருடைய கோலிசோடா 2 படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கின்றேன்” என்றார் வி.சத்யமூர்த்தி.