ஒரு மணி நேரத்துக்குள் நடக்கும் திருப்பங்களை திகிலுடன் சொல்லும் ‘கிரகணம்’

தமிழ்சினிமா எப்போதும் இளம் இயக்குநர்களால் புதுப்புது வடிவம் எடுக்கும். அந்த வகையில் ‘கிரகணம்’ ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படும் ஒரு புதிய கதை என்கிறார் இயக்குநர் இளன்.
இப்படத்தின் கதையைப்பற்றி அவர் கூறுகையில், சந்திர கிரகணம் நிகழும் ஓர் நாள் இரவில் நம் கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. இந்த இருள் ஒரு மணி நேரம் தான்.அந்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்களின் வாழ்வில் என்ன என்ன திருப்பங்கள் வருகிறது என்பதை பரபரப்பாகவும் திகிலாகவும் திரைக்கதை அமைந்திருப்பதாக கூறுகிறார்.
ஒரு நாள், ஒரு இரவு என்றெல்லாம் கதைகளை சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவத்தை சொல்கிறார் என்றால் ஆச்சர்யம் தான். இதில் நாயகர்களாக கிருஷ்ணா, சந்திரன் இணைந்து நடிக்க நந்தினி என்ற புதுமுக நாயகி அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பாண்டி மற்றும் சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு ஸ்ரீ சரவணன், படத்தொகுப்பு மணிகுமரன் சங்கரா. கே.ஆர்.பிலிம்ஸ் சார்பில் சரவணன் & கார்த்திக் தயாரித்திருக்கும் இப்படத்தை இணை தயாரிப்பு: ஹயாசி இன்டர்நேஷனல் சார்பில் சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கிறார்.