பாலிவுட்டிலிருந்து அழைப்பு! – படு உற்சாகத்தில் ஜீவா
‘கொரில்லா’, ‘ஜிப்ஸி’ படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜீவா.
இந்த இரண்டு படங்களையும் சேர்த்து மொத்தம் அரை டஜன் படங்களை தமிழில் வைத்திருக்கும் அவருக்கு தற்போது உற்சாக அழைப்பு பாலிவுட்டிலிருந்து வந்திருக்கிறது.
ஆமாம், முதல்முறையாக ஹிந்தியில் கால் பதிக்கப் போகிறாராம் ஜீவா.
அந்த பரவச அனுபவத்தைப் பற்றி அவரிடமே கேட்டோம்…
“1983 வேர்ல்ட் கப் ” என்ற படத்துல நடிக்கிறேன்…ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி. பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ? அது மாதிரி இந்த படமும் இருக்கும். 100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்.
நான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன். நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன். ஜெயிச்சிருக்கேன். அப்படிப் பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ கேமரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்.
1983 ல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம். கிட்டத்த 100 நாள் லண்டன்ல ஷுட்டிங். அதுக்கு இப்பவே தயாராயிட்டு இருக்கோம். அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார். அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமை தானே? தமிழ்நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக்கிட்டா நாலு பேர் தானே? அந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம் தானே?
மே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது. மிகப் பிரபலமான பெளலரான சந்து வீட்டுக்கே வந்து கோச் கொடுத்துட்டு இருக்கார். இப்பவே அந்த படத்துக்கு தயாராயிட்டு இருக்கோம். லகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கு.
இனிமே யானை மாதிரி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியற மாதிரி இருக்கும். 2019 எனக்கு மட்டுமில்ல…சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும்னு நிறைய நம்பிக்கை இருக்கு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்…சினிமாவுக்கு நல்ல வழி கிடைக்க வேண்டும். அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துகள். உழவு தொழில் சிறக்கட்டும். உயரிய நிலை அடையட்டும்” என்றார் ஜீவா.