காற்று வெளியிடை – விமர்சனம்

RATING 2.3/5
மணிரத்னம்- ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலக வாழ்க்கையில் இது 25-வது ஆண்டு. இந்த வெற்றி ஆண்டில் மீண்டும் இருவருடைய கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘காற்று வெளியிடை.’
கதை 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின் போது நடக்கிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே நடந்த கார்கில் யுத்தத்தில் இந்திய விமானப் படையில் பைலட்டாக இருக்கும் கார்த்தி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறார்.
அவரை அப்படியே தூக்கிக் கொண்டு சிறையில் போட்டு வாட்டியெடுக்கிறது அந்நாட்டு ராணுவம். அந்த கொடுமைகளுக்கு நடுவே தான் உருக உருக காதலித்த நாயகி அதிதி ராவ் ஞாபகங்களை விவரிக்கிறார்.
காஷ்மீரில் டாக்டராக பணியாற்ற வரும் நாயகி அதிதிக்கும், ராணுவத்தில் பணியாற்றும் கார்த்திக்கும் எப்படி காதல் மலர்கிறது? பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திடம் வசமாக சிக்கிக் கொண்ட கார்த்தி எப்படி அங்கிருந்து நேக்காக தப்பித்து வருகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
மணிரத்னம் படங்களில் தொழில்நுட்ப ரீதியிலான அம்சங்கள் எல்லாவற்றிலும் எந்தக் குறையும் இருக்காது. அந்த வகையில் இந்தப்படமும் டெக்னிக்கலாக நம்மை ரொம்பவே ரசிக்க வைக்கிறது.
குறிப்பாக ரவி வர்மனின் டாப் ஆங்கிள் ஷாட்டுகள் எல்லாமே ஹாலிவுட் தரத்தில் நம்மை மிரட்டுகின்றன. நாயகி அதிதி ராவ்வின் கண்களில் தெரிகிற அந்த பரிசுத்தமான அழகை திரையில் மெய் மறந்து ரசிக்கலாம்.
பருத்தி வீரன் கார்த்தியா இது என்று நம்மை சற்றே வியப்படைய வைக்கிறார் க்ரீன் சேவ் ஹீரோவாக வரும் கார்த்தி. அவருடைய ஆணாதிக்க குணத்தை கேரக்டர் வழியாக மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தப்படம் கார்கில் வீரர்களுக்கு சமர்ப்பணம் என்று படம் ஆரம்பிக்கும் முன்பே டைட்டிலில் போட்டு விட்டுத்தான் ஆரம்பிக்கிறார் மணிரத்னம். ஆனால் அப்படி சமர்ப்பணம் செய்கிற அளவுக்கு படத்தில் அவர்கள் செய்த சாகசக் காட்சிகள் படத்தில் இல்லை என்பது என்பது பெரும்குறை.
கேப் கிடைத்தால் கூட இருக்கும் ஹீரோவை விட நீளமான வசனத்தைப் பேசி கைதட்டல்களை வாங்குகிற ஆர்.ஜே.பாலாஜி இதில் என்னாச்சு பாலாஜி என்று கேட்க வைக்கிற அளவுக்குத்தான் கேரக்டர். அந்தளவுக்கு அடக்கி வாசித்திருக்கிறார்.
படத்தில் நம்மை திரும்ப திரும்ப ரசிக்க வைப்பது காஷ்மீர் பனிப்பிரதேசத்தின் எழில்மிகு இடங்களை இஞ்ச் பை இஞ்ச் படம் பிடித்துக் காட்டும் ரவி வர்மனின் பரிசுத்தமான ஒளிப்பதிவு தான். படத்தின் ஒட்டுமொத்த உழைப்புக்கான முக்கால்வாசிப் பாராட்டு அவரையே சாரும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நம்மை படத்தோடு ஒன்றிப் போகச் செய்கிறது.
மணிரத்னம் படங்களில் பார்க்கக்கூடிய நாயகன், நாயகி காதல், ஈகோ அதனால் ஏற்படுகிற பிரிவு பிறகு மீண்டும் ஒன்று சேர்வது என எல்லாமும் இதிலும் உண்டு. இப்படித்தான் இருக்கும் மணிரத்னம் படம் என்கிற எதிர்பார்ப்போடு போகிற ரசிகர்களை ஏமாற்றாத படம் இந்த ‘காற்று வெளியிடை.’
காற்று வெளியிடை – பரி’சுத்தம்’