வறுமையில் வாடிய பி.எஸ்.வீரப்பாவின் மகனுக்கு 1 லட்சம் கொடுத்த தயாரிப்பாளர் தாணு!

Get real time updates directly on you device, subscribe now.

thanu

பி.எஸ் வீரப்பாவை நினைவிருக்கிறதா… மகாதேவி, மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் கம்பீர வில்லனாக வந்து பின், பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் ஆந்த ஜோதி, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, நட்பு உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.

பிஎஸ்வி பிக்சர்ஸ் பேனரில் வெற்றி, சபாஷ், சாட்சி உள்பட அடுத்தடுத்து 4 படங்களை இயக்கியவர் இன்றைய டாப் ஸ்டார் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரப்பாவின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன். இவரும் தயாரிப்பாளர்தான். ஆனால் பிஎஸ் வீரப்பாவின் மறைவுக்குப் பிறகு, படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.

Related Posts
1 of 2

ஏராளமான படங்களில் நடித்துச் சம்பாதித்த பணத்தை, படத் தயாரிப்பில் இழந்துவிட்டார் வீரப்பா. இப்போதும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் வீரப்பாவின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன். பொருளாதாரப் பிரச்சினை காரணமாக வாடகையைக் கூடச் செலுத்த முடியவில்லை. வீட்டைக் காலி செய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர் நிர்ப்பந்தப்படுத்த, செய்வதறியாமல் திகைத்து நின்றார் ஹரிஹரன்.

விஷயம் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தயாரிப்பாளர் சங்கத்தில் இப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், தாமாகவே முன் வந்து ரூ 1 லட்சத்துக்கான வரைவோலையை பிஎஸ்வி ஹரிஹரனுக்குக் கொடுத்து உதவியுள்ளார். இந்த வரைவோலையை இன்று பிஎஸ்வி ஹரிஹரனிடம், அவர் வசிக்கும் முகலிவாக்கம் வீட்டுக்கே சென்று கலைப்புலி தாணு சார்பில், பிஆர்ஓ சங்க தலைவர் டைமண்ட் பாபு மற்றும் பிஆர்ஓ சிங்காரவேலு ஆகியோர் வழங்கினர்.

ஆரம்பத்தில் இந்த உதவியைச் சத்தமில்லாமல் செய்துவிட வேண்டும் என்றுதான் கலைப்புலி தாணு விரும்பினார். ஆனால், தான் உதவி செய்ததைப் பார்த்த பிறகு, பிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடித்த பிரபலங்கள் ஹரிஹரனுக்கு மேலும் பண உதவி செய்ய முன் வரக்கூடும் என்பதாலேயே இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார் கலைப்புலி தாணு.

பெரும் நடிகராக இருந்து சம்பாதித்ததை, தயாரிப்பாளராகி இழந்து வாடும் பிஎஸ் வீரப்பா குடும்பத்துக்கு நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்யப் போகிறது…?