ராகுல் காந்தி – பா. ரஞ்சித் சந்திப்பு ஏன்?
தன்னை சந்திக்க வருமாறு வந்த அழைப்பு ஏற்று, நேற்று டெல்லியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் ‘காலா’ பட இயக்குனர் பா.ரஞ்சித்.
இருவர் சந்திப்பின்போது ராகுல்காந்தி சமீபத்தில் ‘காலா’ திரைப்படத்தை பார்த்ததாகவும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சாதி, மதம் போன்ற பிரிவினைகளை ஒழிக்க ‘காலா’, ‘கபாலி’, ‘மெட்ராஸ்’ மாதிரியான திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை தரும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இறுதியாக பா.ரஞ்சித், பேரறிவாளன் விடுதலை குறித்து ராகுல் காந்தியிடம் பேசியதாகவும், அதற்கு அவர் பேரறிவாளன் விடுதலையில் நாங்கள் ஒரு தடையாக இருக்க மாட்டோம் எனவும், தன்னால் முடிந்தவரை அவருக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி ”பா.ரஞ்சித்துடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினேன். அவரோடு பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உரையாடல் தொடரும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல், இப்போது பா.ரஞ்சித் என தமிழகத்தில் உள்ள பிரபலங்களை ராகுல் சந்தித்து பேசுவது அரசியல் ரீதியாகவே பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பா. ரஞ்சித் ”ராகுலுடன் அரசியல் மற்றும் கலை, சாதி, மதம், மத ரீதியான அச்சுறுத்தல்கள் பற்றி பேசினேன்” என டிவிட் செய்துள்ளார்.