ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’!

Get real time updates directly on you device, subscribe now.

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்து ‘கராத்தே பாபு’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதை குறிக்கும் வகையில், ரவி மோகன் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த காணொலியில் அவர் பேசும் அரசியல் வசனம் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பும் இடைவிடாமல் நடைபெற்று வரும் நிலையில், டீசர் வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் படத்தை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் விரைவில் வெளியிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப் பூர்வமான அரசியல் திரில்லராக இது உருவாகி வருகிறது,” என்று தெரிவித்தார்.