தோல்விகளையும், அவமானங்களையும் தாண்டி வந்தால் தான் ஜெயிக்க முடியும்! – கார்த்தி சீரியஸ் அட்வைஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

karthi1‘தீரன் அதிகாரம் ஒன்று’

கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட் லிஸ்ட்டி இன்னொரு நம்பராக உறுதியாகியிருக்கிறது.

அந்த வெற்றியை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள நிருபர்களை சந்தித்தார்கள் நாயகன் கார்த்தி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர். பிரபு, இயக்குநர் வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், படத்தொகுப்பாளர் சிவ நந்தீஸ்வரன், பாரன்சிக் ஆபீசர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட படக்குழுவினர்.

விழாவில் கார்த்தி பேசியதாவது, ”ஒரு படம் பார்த்து விட்டு படம் நல்லா இருக்குன்னு சொன்னால் மட்டும் போதாது மக்கள் அனைவரும் திரையரங்கில் வந்து படம் பார்க்க வேண்டும். இந்த படம் என்னை தேடி வந்த படம். இந்த வழக்குகளில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் தன் கஷ்டங்கள் வெளியில் தெரியாமல் போய் விட்டது என்று நினைத்து இருப்பார்கள். அந்த வழக்கு பற்றிய செய்தி இயக்குநர் வினோத் அவர்களுக்கு பத்திரிகை செய்தியாக வந்தது. என்னை அது மீண்டும் மீண்டும் தேடித்தேடி வந்தது. நல்ல படமாக அமைந்ததில் சந்தோஷம். ராஜஸ்தானில் படபிடிப்பு நடத்தும் போது உணவு பிரச்சனை ஏற்படும். அப்போது தயாரிப்பாளர் மொத்த படக்குழுவையும் விமானம் மூலம் அழைத்து சென்று தமிழ்நாட்டு உணவுகள் அனைத்தையும் அங்கேயே ஏற்பாடு செய்தார்.

இயக்குநர் வினோத் படப்பிடிப்பை பற்றி அதிக திட்டங்களை வைத்து இருந்தார். ஆனால் பல பிரச்சனைகள் இருந்தது. ஏனென்றால் அங்கு ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தலைவர் இருந்தார்கள். அவர்களிடம் அனுமதி பெறுவதே பெரும் பாடாக இருந்தது. இதனால் இயக்குநர் நினைத்த விஷயம் குறைந்து கொண்டே வருகிறது என்று அவர் வருத்தப்பட்டார். ஆனால் படத்தொகுப்புக்கு பின் அவ்வளவு பிரச்னையை தாண்டி எடுத்தோம் படம் நல்லா வந்துருக்கு சார் என்றார். ஒரு படம் எடுப்பதே அப்படி தான் இருக்கிறது. நாம் பெரிய கனவுகளோடு செல்கிறோம் அதை எடுத்து முடிப்பது இறைவன் செயலாக இருக்கிறது.

சிவ நந்தீஸ்வரன் நன்றாக உழைத்து உள்ளார். முதல் படத்தில் அவரை பற்றிய கருத்து நல்ல முறையில் வந்தது இருந்தது. இயக்குநர் வினோத் இந்த காட்சியில் இந்த உணர்வு வரவேண்டும் என முதலிலே எழுதி வைத்திருப்பார். ஜிப்ரான் அருமையான கமர்ஷியலாக அனைவருக்கும் பிடித்தது போல் இசை அமைத்து உள்ளார். தனஞ்ஜெயம் சார் நன்றாக நடித்து இருந்தார். கைரேகை எடுப்பதை பற்றி அவர் கூறுவார். அதே போல் காட்சிகள் அமைந்தது.

Related Posts
1 of 29

காவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதையாக அமைய இது போன்ற காட்சிகள் உறுதுணையாக இருந்தது. அவர் கூறும் போது உண்மைலேயே தன் பணியின் மீது பற்று இருந்ததால் மட்டுமே அவர்கள் அவ்வாறு செயல்பட முடியும் என்று தோன்றியது. இந்த படத்தை பார்த்து விட்டு காவல் அதிகாரிகள் தொலைபேசி மூலம் என்னிடம் பேசினார்கள். முக்கியமா அந்த வழக்கில் சம்பந்தபட்ட ஒரு உயர் அதிகாரி படம் பார்க்கும் போது மிக நெகிழ்ச்சியாக இருந்தது அனைவரும் என்னை பாரட்டினார்கள் என்றார்.

கதையை திரையில் கொண்டு வருவது என்பது மிக முக்கியமான ஒன்று பொருளாதார ரீதியாகவும் நடு நிலையாக இருந்து கதிர் சார் பார்த்துக் கொண்டார். இனி அனைத்து காவல்துறை சம்பந்தபட்ட படங்களில் இனி அவர் கண்டிப்பாக இருப்பார் என்று தோன்றுகிறது. இயக்குநர் வினோத்தின் முதல் படம் ‘சதுரங்க வேட்டை’ அருமையான படம். ஆனால் இந்த படம் அதையும் தாண்டி வந்துள்ளது.

வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குநர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ச்சியாக படங்கள் பண்ண முடியும். தோல்விகளையும், அவமானங்களையும் தாண்டி வரும் போது தான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம். இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். ஒரு செயலில் தோல்வி அடைந்தால் குழந்தைகள் சோர்ந்து போகின்றனர். தோல்வி வாழ்வின் ஒரு அங்கம் அதை நீங்கள் சந்தித்தே தீர வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஒரு செயலில் உறுதியாக இருப்பார்கள். வளர வேண்டும் என்றால் தோல்விகளை தாண்டி தான் வரவேண்டும் என்று பெற்றவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். தேர்வு சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது திணிக்கும் அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

எங்க அப்பா என்னிடம் மார்க் பற்றி கேட்டதே இல்ல. நீ நல்லா படிச்சா நீ நல்லா இருப்ப அவ்ளோ தான் என்று கூறுவார். அந்த பயத்துலேயே நானே படிப்பேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதனால் அந்த சிந்தனை அடிகடி எனக்குள் வருகிறது எத்தனையோ குழந்தைகள் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கின்றது. சில பெற்றோர்கள் பொறுமை இழந்து குழந்தைகளை அடிகிறார்கள் குழந்தைகளை அடிக்க வேண்டாம். சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம். குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

இந்த படத்தில் காதல் காட்சி பற்றி அனைவரும் கூறினார்கள் சில பேர் காதல் காட்சி நன்றாக இல்லை, என்றும் சில பேர் காதல் காட்சி அருமையாக வந்து உள்ளது என்றும் கூறினார்கள். ஒரு படத்தில் அனைத்து விதமான விமர்சனக்கள் வரும். ஆனால் இந்த படத்தில் நல்ல விதமான விமர்சனகள் மட்டுமே வந்தது உள்ளது” என்றார்.