காவேரி விவகாரம் – கமல், ரஜினி படங்களுக்கு சிக்கல்!
ள்
காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதே கருத்தை சமீபத்தில் அரசியல்வாதிகளாக மாறியிருக்கும் ரஜினியும், கமலும் வலியுறுத்தி பேசி வருகிறார்கள். கருத்தும் தெரிவித்து வருகிறார்கள்.
கர்நாடக மாநிலத்துக்கு எதிராக அவர்கள் சொல்லும் இந்தக் கருத்துகளால் அவர்களுடைய திரைப்படங்கள் ரிலீசுக்கு அங்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் டைரக்ஷனில் தயாராகியிருக்கும் ரஜினியின் ‘காலா’ பட வேலைகள் முடிந்து இந்த மாதம் 27-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரஜினிகாந்தின் இன்னொரு படமான ஷங்கர் டைரக்ஷனில் தயாராகி வரும் ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால் அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இந்தப்படம் ரிலீசுக்கு முந்தியிருக்கிறது.
அதேபோல கமல்ஹாசனும் தனது ‘விஸ்வரூபம்-2’ படத்தை முடித்து ‘யு/ஏ’ சென்சார் சர்ட்டிபிகேட் வாங்கிய நிலையில் திரைக்கு வரத் தயாராக உள்ளது.
இந்த இரண்டு படங்களையும் கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று அங்குள்ள கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள ரஜினி, கமல் ஆகியோருக்கு கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்த மிரட்டல் காரணமாக ரஜினியின் ‘காலா’, கமலின் ‘விஸ்வரூபம்-2’ படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்வதில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இருவருடைய படங்களுக்குமே கர்நாடகாவில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டு வசூல் பார்க்க திட்டமிட்டிருந்தார்கள். ஒருவேளை இரண்டு படங்களையும் கர்நாடகாவில் திரையிடாவிட்டால் தயாரிப்பு தரப்புக்கு சில கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் படங்கள் ரிலீசாகும் போது கர்நாடக வினியோகஸ்தர்கள் மூலம் படங்கள் ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.