லாபம்- விமர்சனம்

எந்தத் தொழிலும் லாபத்தை அடிப்படையாக கொண்டே துவங்கப்படுகிறது; நடத்தப்படுகிறது. லாபம் மிக முக்கியமான ஒன்று தான். அதேநேரம் லாபம் யாரிடமிருந்து எப்படியான முறையில் பெறப்படுகிறது என்பதை விளக்குகிறது லாபம். எளிய மக்களின் உழைப்பும் தியாகமும் உழைக்காதவர்களுக்கு பெரு லாபமாக மாறுவது எத்தகைய சாபம் என்பதை முகத்திலறைந்து பேசியுள்ளது படம்.
பக்கிரியாக வரும் விஜய்சேதுபதி பெருவயல் கிராமத்தில் விவசாய சங்கத்தின் தலைவராகிறார். கலையரசன், பிரித்விராஜ் உள்ளிட்டவர்கள் அவரது இளம் படை. மிகச்சிறப்பாக சங்கத்தை வளர்த்தெடுக்கிறார்கள். முன்னாள் தலைவர் ஜெகபதி பாபு செய்து வைத்திருந்த அட்டூழியங்களை எல்லாம் புட்டு புட்டு வைக்கிறது விஜய்சேதுபதி டீம். எளிய மக்களுக்கென கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை சட்டப்போராட்டத்தில் மீட்டு அங்கு கூட்டு விவசாயம் செய்ய ஆயத்தமாகிறார் விஜய்சேதுபதி. ஜெகபதி பாபு அந்த நிலத்தை தனது கார்ப்பரேட் பிஸ்னெஸ்க்கு பயன்படுத்த முயற்சிக்கிறார். இந்த நிலம் யார் கையில் கிடைக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை
எஸ்.பி ஜனநாதனுக்கு முதலில் ஒரு செவ்வணக்கம். இப்படியான சமூகத்தேவையுள்ள படங்களை அவர் தரத்தவறியதே இல்லை..அவரின் இழப்பு நமக்கு பேரிழப்பு..விவசாய சங்கத்தலைவராக வரும் விஜய்சேதுபதி வெகு இயல்பாக ஈர்க்கிறார். சில இடங்களில் கண்டினிட்டி பிரச்சனை இருப்பது மட்டும் துருத்தி நிற்கிறது. கலையரசன் பிரித்விராஜ் என வி.ஜேயின் நண்பர்களாக வரும் அனைவருமே நல்ல தேர்வு. ஸ்ருதிஹாசன் கேரக்டர் படத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் சாய் தன்ஷிகா கேரக்டரை இவ்வளவு வீணடித்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.
வில்லனாக வரும் ஜெகபதிபாபு ஒரு கார்ப்பரேட் சூழ்ச்சிக்காரரை கண்முன் நிறுத்துகிறார். டி.இமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தனிரகம். ராம்ஸியின் கேமரா பெருவயலை பெருவயலாகவே காட்டியுள்ளது. படத்தின் எடிட்டர் இன்னும் கொஞ்சம் ஷார்ப் செய்திருக்கலாம்.
எஸ்.பி ஜனநாதன் படத்தில் அட என்று சொல்ல வைக்கும் பல காட்சிகள் இருக்கும். லாபத்தில் அது மிஸ்ஸிங்..அதேபோல் நிறைய லாஜிக்குகளும் இடிக்கிறது. சமரசமில்லாமல் சமூகப்படம் எடுத்திருந்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் சமரசம் செய்திருப்பதால் லாபத்தை மொத்தமாக அறுவடை செய்ய முடியவில்லை… லாபம்- முதலுக்கு மோசமில்லை
3/5