நயன்தாராவைப் பற்றி மகா மட்டமான பேச்சு! – சர்ச்சையில் சிக்கிய ராதாரவி!
‘கொலையுதிர் காலம்’ பட விழாவில் அப்படத்தின் நாயகி நயன் தாராவைப் பற்றி மகா மட்டமாக சில கருத்துகளை மேடையில் பேசினார் பிரபல நடிகர் ராதாரவி.
அவருடைய இந்தக் கருத்தை முதலில் எதிர்த்தவர் இயக்குனரும், நயன்தாராவின் காதலர் என்று சொல்லப்படுகிற விக்னேஷ் சிவன். அவரைத் தொடர்ந்து பாடகி சின்மயியும் இந்த விஷயத்தை கையில் எடுத்ததால் விஷயம் விஸ்வரூபம் ஆனது.
அதன் விளைவாக திமுக கட்சி ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறது. நடிகர் சங்கமும் ராதாரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இப்படி தனது சர்ச்சையான கருத்துகளால் நாலா பக்கமும் இருந்து எதிர்ப்புக் குரல்கள் வரவும் இன்று விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார் ராதாரவி.
அதில் ”தனது கருத்து பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நயன்தாராவைப் பற்றி நான் தவறாக பேசவில்லை. நான் பேசியது அரசியலாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்களுக்கு என்னுடைய மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னால் திமுகவிற்கு கெட்ட பெயர் வர வேண்டாம் என்று நானே விலகுவதாக தெரிவித்துக் கொள்கிறேன். ட்விட்டரில் ட்வீட் போடுபவர்கள் எல்லாம் நான் முன்பு பேசியதை மனதில் வைத்துக்கொண்டு இப்போது விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எம்ஜிஆர் ரஜினி யோடு நயன்தாராவை கம்பேர் பண்ணாதீர்கள் என்று சொன்னேன். அதை ஒத்துக் கொள்கிறேன். மீடு சர்ச்சை கூட வேறு ஒரு கோணத்தில் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் அப்போது சினிமாவில் உள்ள நியாயத்தை தான் பேசினேன். இந்த நேரத்தில் அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள் அது தவறு. இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை என்னிடம் விளக்கம் கேட்டால் கொடுக்க தயார். மீண்டும் திமுகவில் இணைவதற்கு வாய்ப்பு இருந்தால் இணையவும் தயார்” இவ்வாறு ராதாரவி தெரிவித்திருக்கிறார்.