அஜித்தின் ‘பிங்க்’ ரீமேக் பட டைட்டில் ‘நேர் கொண்ட பார்வை’
‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து பிங்க் ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் அஜித்.
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்துக்கு பூஜை போட்டபோது ‘ஏ.கே 59’ என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் படத்துக்கு ‘நேர் கொண்ட பார்வை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கெட்டப்பான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம மாஸாக காட்சியளித்தார். அவரோடு படத்தில் நடிக்கும் மூன்று நாயகிகளும் இடம்பெற்றிருந்தனர்.
இப்படத்தை போனி கபூருடன் இணைந்து ஜீ நிறுவனம் தயாரிப்பதால், படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் தான் பெற்றிருக்கிறது.
நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ‘பிங்க்’ ஹிந்திப் படத்தில் அமிதாப்பச்சன் கேரக்டரில் தான் தமிழில் அஜித் வக்கீலாக நடிக்கிறார். இதற்காக 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார். அஜித்தின் மனைவியாக வித்யா பாலன், வழக்கில் சிக்கிக் கொள்ளும் மூன்று பெண்கள் கேரக்டரில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் ஆண்ட்ரியா நடிக்கிறார்கள்.
இவர்களைத் தவிர மற்ற கேரக்டர்களில் ரங்கராஜ் பாண்டே, அர்ஜூன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.