ரொம்ப வருஷத்துக்கப்புறம் ஒரு ரியல் சக்சஸ்! : 150 வது படத்தில் அர்ஜூனுக்கு கிடைத்த பெருமை

ஜி.எஸ். வரிக்குப் பிறகு தியேட்டர்களில் அதிகரிக்கப்பட்ட டிக்கெட் கட்டண உயர்வு தமிழ்சினிமாவுக்கு பெரும் சோதனையாக கருதப்பட்டது. நல்லவேளையாக அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நல்ல கதையம்சமுள்ள படங்கள் என்றால் அந்தக் கூடுதல் கட்டணத்தை நாங்கள் மனதார ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
முன்னதாக ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசின் உள்ளூர் வரிப்பிரச்சனைக்குப் பிறகு ரிலீசான மீசைய முறுக்கு, விக்ரம் வேதா ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இதனால் திரையுலகினர் மகிழ்ச்சியடைந்தனர், தற்போது அந்த வெற்றிப் படங்களின் வரிசையில் சென்ற வாரம் ரிலீசான நிபுணன் படமும் சேர்ந்திருப்பது அப்படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லர் படமான நிபுணன் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்…
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அருண் வைத்தியநாதன் “நிபுணன் கதையின் மீது எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜுன் சாரின் 150-ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிகமிகப் பெருமை. அந்த வாய்ப்பை அவர் எனக்குக் கொடுத்ததும் அவருடைய பெருந்தன்மை. இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் உமேஷ் பேசும் போது “ஊடகங்களின் கருத்தும், மக்களின் கருத்தும் ஒன்றி போனது இந்த படத்தின் வெற்றிக்கு மிக பெரிய அடித்தளமாகும்” என்றார்.
“நன்றி அறிவிப்புக்கு என்று ஒரு விழாவை நடத்தி இருப்பதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு 150 படம். இப்போது தான் ‘நன்றி’ படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். அதற்குள் 150 படங்கள் நடித்து முடித்து விட்டோமா என்று நினைக்கிற போது ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடன் பணிபுரிந்த அத்தனை திரை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கதை வடிவத்தில் இருந்த இந்த அற்புதத்தை திரை வடிவத்தில் கொண்டு வந்தமைக்கு இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு நன்றி” என்றார் அர்ஜூன்.