காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ’நிலா வரும் வேளை’!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது வசீகரம் மற்றும் நடிப்புத் திறமையால் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார். நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து திறமையான நடிப்பால் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கியவுடன் காளிதாஸ் ஜெயராம் தனது சினிமா பயணத்தைப் புதிய உயரத்திற்கு உயர்த்தும் நோக்கத்தில் இனி கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற முடிவு எடுத்துள்ளார். அவரது இந்த முடிவு தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா தலைமையிலான மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான மிராக்கிள் மூவிஸ் மூலம் நிறைவேறியுள்ளது. இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பாலக்காட்டில் பூஜையுடன் தொடங்கியது.
’லட்சுமி’, ’மாறா’ மற்றும் ’டிரிகர்’ போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வழங்கிய மிராக்கிள் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த புதிய படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. ’நிலா வரும் வேளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிப் படமாக உருவாகிறது.
தமிழில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனா கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். தெலுங்கில் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதற்கு முன்பு ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற ஃபீல் குட் ரொமாண்டிக் என்டர்டெய்னர் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்த ஹரி இந்தப் படத்தை இயக்குகிறார்.