என்னை ஏம்ப்பா வம்புல மாட்டி விடுறீங்க? : அப்செட்டான மெர்சல் எடிட்டர்

‘மெர்சல்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடவுள்ளதாக வெளியான செய்திக்கு எடிட்டர் ரூபன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர்.
விவகாரம் தீவிரமடைந்ததையடுத்து அவர்கள் விரும்பினால் சம்பந்தப்பட்ட காட்சிகளை நாங்கள் படத்திலிருந்து நீக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ்.
அந்த அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே மெர்சல் படத்தில் எந்தக் காட்சியும் நீக்கப்படவில்லை. விஜய் ரசிகர்கள் படத்தை பார்த்து ரசிக்கலாம் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹேமா ருக்மணி.
இதற்கிடையே மெர்சல் படத்தின் நீளம் கருதி படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு அவை யு-ட்யூப்பில் தனியாக வெளியிடப்படும் அப்படத்தின் எடிட்டர் ரூபன் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஒருவேளை பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்த காட்சிகளைத் தான் நீக்குகிறார்களோ? என்று விஜய் ரசிகர்கள் குழம்பினர். அதோடு இது மானப்பிரச்சனை என்பதால் அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் மெர்சல் படத்திலிருந்து காட்சிகள் நீக்கப்படும் என்று நான் சொல்லவே இல்லை என்று தெரிவித்திருக்கிறார் எடிட்டர் ரூபன்.
‘மெர்சல்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. சில பாடல்களும், நகைச்சுவை காட்சிகளும் நீளம் கருதி நீக்கப்பட்டது. இப்போதைக்கு நீக்கப்பட்ட எந்த காட்சிகளும், பாடல்களும் வெளியிடப்படப்போவதில்லை. தேவையில்லாமல் பொது வெளியில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.