‘ஓடு ராஜா ஓடு’ : நால்வரின் பிண்ணனியில் எடுக்கப்பட்ட நகைச்சுவைப் படம்

Get real time updates directly on you device, subscribe now.

guru-somasundaram

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல சினிமாக்களை கொண்டு சேர்க்கிற பணியில் ஒருவராக மாறியிருக்கிறார் நடிகர் குரு சோமசுந்தரம்.

ராஜுமுருகன் இயக்கத்தில் ரிலீசான இந்தப்படம் ரசிகர்களுக்கு மட்டும் நல்ல படமாக அமையவில்லை. கூடவே குரு சோமசுந்தரம் கேரியரையும் அந்தப்படம் மாற்றியிருக்கிறது.

அந்த வகையில் குரு சோமசுந்தரம் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் படம் தான் ‘ஓடு ராஜா ஓடு’.

நீண்ட கால நண்பர்களான நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜதின் ஷங்கர் ராஜ் இணைந்து இப்படத்தை இயக்கியிருப்பதோடு மற்ற துறைகளிலும் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர்.

இப்படத்தை 30 வருடங்களாக மிகவும் பிரபலமான நிறுவனமாக விளங்கும் மூலன் குருப் நிறுவனத்தின் தலைவர் விஜய் மூலன் தயாரித்துள்ளார்.

நடித்தால் சோலோ ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் நான்கு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரமாக இப்படத்தில் நடித்திருக்கிறார் குரு சோமசுந்தரம்.

நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரு நாளில் நடக்கும் கதை. நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு. அதனை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். இந்த நால்வரும் ஒருவரை ஒருவர் சந்திக்கையில் என்ன நேர்கிறது என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் இந்த படத்தின் கதையை அமைத்துள்ளார்களாம் மேற்படி இரட்டை இயக்குநர்கள்.

இப்படத்தில் நாசர், சாருஹாசன், ஆனந்த் சாமி, லக்‌ஷ்மி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சரி ஜோக்கர் படத்தில் உங்கள் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்குமென்று எதிர்பார்க்கிறீர்களா? என்கிற கேள்வியை குரு சோமசுந்தரத்திடம் வைத்தால் அதிர்ச்சியான பதிலைத் தருகிறார்…

எங்க போனாலும் ரசிகர்கள் என்கிட்ட அன்பா பேசுறாங்க.., அன்பா பழகுறாங்க..அவங்களோட அந்த அன்பே எனக்கு தேசிய விருது மாதிரி தான் என்கிறார்.

பழகுவதில் மட்டுமல்ல, பேசுவதிலும் கூட எளிமை தான் போங்க!