அடடா..வட போச்சே – வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பை தவற விட்ட ஷங்கர்

ஆஸ்கார் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் ‘ஒரு கதை சொல்லட்டுமா.’
பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஒலியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஒரு நல்ல இசை அனுபவத்தைக் கொடுக்கும் விதமாக வர இருக்கும் இந்தப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த ஒரு பெருமை இருந்தாலும் இதே படத்தில் இன்னொரு ஆச்சரியமும் உள்ளது. அது தான் பூரம் திருவிழா. இந்த விழாவை அப்படியே இந்தப் படத்துக்காக படமாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தின் ஆடியோ விழாவில் இதைக் குறித்துப் பேசினார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.
இதுகுறித்துப் பேசிய இயக்குநர் ஷங்கர் ”கேரளாவின் திருச்சூரில் பூரம் திருவிழாவின் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் ரசூல் அதை பற்றி விளக்கி சொன்னபோது தான் அந்த பிரம்மாண்டம், அதன் பெருமை புரிந்தது. 10 லட்சம் மக்கள் கலந்து கொள்ள, 300 கலைஞர்கள் 3 மணி நேரம் இசையை நிகழ்த்துவார்கள்.
இந்த விஷயம் எனக்கு முன்னரே தெரிந்திருந்தால் என் படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் காட்சியாக வைத்திருப்பேன். அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. அந்நியன் படத்தில் வரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனையை கொஞ்சமாக பதிவு செய்திருப்பேன். அதை முழுமையாகப் படமாக்க கேட்ட போது எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.
ஆனால் ரொம்பக் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி ஒரு கதை சொல்லட்டுமா படத்தில் பூரம் விழாவை லைவ்வாக ரெக்கார்டு பண்ணியிருக்கிறார் ரசூல் பூக்குட்டி. வரலாற்றில் இது ஒரு முக்கியமான பதிவு.
ஸ்டுடியோவில் மட்டுமே ஒலியை பதிவு பண்ணாமல் வெளியே போய் நல்ல ஒலியை பதிவு செய்து மக்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்க கடுமையாக உழைக்கிறார் ரசூல் பூக்குட்டி, அவருக்கு என் பாராட்டுகள் என்றார் இயக்குனர் ஷங்கர்.
பின்னர் பேசிய ரசூல் பூக்குட்டி ”என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 22 மிகவும் முக்கியமான இரவு. அதிகாலை இரண்டு மணிக்கு எனக்கு ஒரு கதை சொல்ல வந்தார். அந்த கதை தான் இந்த ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பூரத்தை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு. அந்த கனவை நிறைவேற்ற எனக்காக அமெரிக்காவில் இருந்து வந்தவர் தான் ராஜீவ் பனகல்.
இந்த படத்தின் ரெக்கார்டிங்கின் போது பல இடங்களுக்கு சென்று வந்தேன். பார்வையற்ற ஒருவர் கூட பூரம் திருவிழாவை உணர முடியும். எந்திரன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து என்னை தென்னிந்திய சினிமாவுக்கு அழைத்து வந்த இயக்குனர் ஷங்கருக்கு நன்றி” என்றார் படத்தின் நாயகன் ரசூல் பூக்குட்டி.
விழாவில் 80-களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் லிஸி, ரோகிணி, ரேவதி, குஷ்பூ, ஷோபனா, பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார் போன்றவர்களை மேடையேற்றி கெளரவித்தது வைந்திருந்த பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.