வாயில் நுழையாத பெயருடன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் உறவுக்காரப் பெண்!

தெலுங்கில் பிரபல ஹீரோவான மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணும், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகளுமான நிஹாரிகா கோனிடேலா தமிழ்சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் தான் நிகாரிகா கோனிடேலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஆறுமுக குமார் இப்படத்தை இயக்குகிறார்.
படத்தின் நடித்த அனுபவம் குறித்து நிஹாரிகா பேசுகையில், ” தமிழில் எனது முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. சிறந்த அணி, சிறப்பான கதை எனக்கு கிடைத்துள்ளது . தமிழ் மொழி மீது என்றுமே பற்றுள்ளவள் நான். எனது குடும்பத்தில் எல்லோருமே நன்றாக தமிழ் பேசுவார்கள்.
விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களை பார்ப்பது அரிது. அவர்களுடன் பணிபுரிந்து ஒரு அருமையான அனுபவம். இப்படத்தில் எனது கதாபாத்திரம் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் அல்ல. எனது இந்த கதாபாத்திரம் இரண்டு பெயர்களில் வரும். ஏன் இரண்டு பெயர்கள் என்பதை படம் பார்க்கும் பொழுது நீங்களே அறிவீர்கள்.
எனது குடும்பத்தார் எனக்கு அளிக்கும் ஆதரவும், ஊக்கமும் அளவற்றது. இது போன்ற ஒரு குடும்பம் அமைந்துள்ளதால் நான் பெரிய அதிர்ஷ்டசாலி. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ‘ படத்தையும் எனது கதாபாத்திரத்தையும் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்து கொண்டாடுவார்கள் என நம்புகிறேன் ” என்றார்.