4 கோடி ரூபாய் அவதூறு! : கஞ்சா கருப்பு மீது முன்னாள் மேனேஜர் வழக்கு

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ்சினிமாவில் பிஸியான காமெடியனாக இருந்தவர் கஞ்சா கருப்பு.
அமீரின் ‘ராம்’ படத்தில் அறிமுகமானவர் பருத்தி வீரன், சிவகாசி, சண்டைக்கோழி என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக தலைகாட்டினார்.
அடிப்படையில் படிப்பறிவற்ற கஞ்சாகருப்புவுக்கு கையெழுத்து போட கற்றுக் கொடுத்தது முதல் எல்லாமுமாக இருந்தவர் மக்கள் தொடர்பாளர் வீ.கே.சுந்தர்.
அவர் இருந்தவரை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. கஞ்சா கருப்புவும் சொந்த வீடு கட்டுகிற அளவுக்கு வளர்ந்தார்.
இப்படி வளர்ந்து வந்த நேரத்தில் கஞ்சா கருப்புவுக்கும், வீ.கே சுந்தருக்கும் மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
அதன் பிறகு கஞ்சா கருப்புவுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அதோடு சம்பாதித்த பணத்தில் வேல்முருகன் போர்வெல் என்ற பெயரில் சொந்தப்படம் எடுத்து மேலும் கடனாளியானார்.
இதற்கிடையே சென்ற வாரம் பிரபல வார இதழில் மக்கள் தொடர்பாளர் வீ.கே சுந்தரும், அவரது மனைவியும் கள்ளன் பட இயக்குநருமான சந்திராவும் 4 கோடி ரூபாய் வரை தன்னிடம் மோசடி செய்து விட்டார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
கஞ்சா கருப்புவின் இந்த ஸ்டேட்மெண்ட் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து தன் மீது அவதூறாக கருத்துகளைச் சொன்ன கஞ்சா கருப்பு மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக தெரிவித்திருக்கிறார் மக்கள் தொடர்பாளர் வீ.கே சுந்தர்.
மேலும் கஞ்சா கருப்பு மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் அவரது மனைவியும் இயக்குநருமான சந்திரா.