அரச பயங்கரவாதத்தை தோலுரித்து காட்டும்’முத்துநகர் படுகொலை’!

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முத்துநகர் படுகொலை’. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும் அதில் கொடூரமாக 13 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட் நிகழ்வும் தமிழகத்தையே உலுக்கியது.. அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகள் என்ன என்பதை சொல்லும் 60 நிமிடம் கொண்ட ஒரு ஆவணப்படமாக இது உருவாகி உள்ளது.
ஏற்கனவே ‘மெரினா புரட்சி’ என்கிற இதேபோன்ற ஒரு ஆவணப்படத்தில் மெரினா போராட்டத்தின் கடைசி நாளன்று ஏன் வன்முறை களமாக மாறியது, அதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் விதமாக படமாக்கியிருந்தார் எம்எஸ்.ராஜ்.
அதேபோலத்தான் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ‘முத்துநகர் படுகொலை’ என்கிற பெயரில் விறுவிறுப்பான திரைப்படம் போன்ற ஒரு ஆவணப்படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்.
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திரைக்கலைஞர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர்.