10 விவசாயிகளுக்கு தலா 20 ஆயிரம் உதவித்தொகை! : பிரசன்னா – சினேகாவின் பெரிய மனசு

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டதால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில 41 நாளாக போராடி வருகின்றனர். அத்தனை நாட்களில் விதவிதமான போராட்டங்களை நடத்தியும் பிரதமர் மோடி கண்டுகொள்ள மனமில்லை.
இப்படி 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு உதவ பலரும் முன் வருகின்ற நிலையில் பிரபல திரைப்பட நடிகர் பிரசன்னா, சினேகா தம்பதியினர் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு தலா 20 ஆயிரம் வீதம் 10 பேருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை அளித்திருக்கின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை சினேகா ”விவசாயிகளுக்கு உதவ அனைவரும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாழ்நாள் முழுவதும் நாம் உண்ணும் உணவு படைக்கும் விவசாயிகளுக்கு உதவ வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றார். இந்த சிறி நிதியுதவி அவர்களின் பிரச்னையை போக்கிவிடாது என்றாலும், எங்களால் இயன்ற உதவியைச் செய்துள்ளோம் என்று சினேகா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் பிரசன்னா ”தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். என்னுடைய சம்பளம் முழுவதும் கொடுக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெறவில்லை என்றாலும், இயன்றதைச் செய்து இன்பம் பெறும் முயற்சியாகவே நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதே போன்று நடிகர்கள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி அளிக்க முன் வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.