”என்னை படங்களில் நடிக்க விடாமல் தடுக்கிறார்கள்” – தயாரிப்பாளர் சங்கம் மீது சிம்பு பாய்ச்சல்

சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படமெடுத்ததால் தனக்கு 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
அதைத்தொடந்து அதே பிரச்சனை தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு சிம்புவும், ஆதிக் ரவிச்சந்திரனும் பேசிய ஆடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ”என்னை படங்களில் நடிக்க விடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுக்கிறது” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார் சிம்பு
நடிகர் சங்கத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு ஒரு நடிகனாக எனது பதிலை நடிகர் சங்கத்துக்கு தெரிவித்து விட்டேன். அதுகுறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை நடிகர் சங்கம் எடுக்கலாம்.
ஆனால் அதைச் செய்யாமல் மணிரத்னத்தின் ”செக்கச் சிவந்த வானம்” படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, தினமும் போன் செய்து என்னை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று தயாரிப்பாளருக்கு இடைஞ்சல் கொடுக்கிறார்கள். இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் உடன் பேசி அவர்களிடம் விளக்கி விட்டேன்.
படம் ரிலீசாகி 6 மாதத்திற்கு பிறகு என்மீது குற்றம் சுமத்துகிறார்கள். அது யாருடைய தூண்டுதலின் பேரில் செய்தார்கள் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது தனிப்பட்ட பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதனை நடிகர் சங்கத்தில் தான் முறையிட வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் பிரகாஷ்ராஜிடமும் இதுகுறித்து நான் விளக்கி விட்டேன் என்று கூறியிருக்கிறார் சிம்பு.