யார் யாரோ சி.சி.எல் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; நம் மானம் போகிறது : சீறிய ஆர்.கே.செல்வமணி
சில தினங்களுக்கு முன்பு நடந்த ”காட்டுப்புறா” ஆடியோ பங்ஷனில் கலந்து கொண்டார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. எப்போதுமே எதையும் வெளிப்படையாக பேசும் அவர் நட்சத்திர கிரிக்கெட் பற்றியும் பேச பங்ஷனில் அனல் பறந்தது…
என் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் என்னிடம் கேட்டாள். ‘என்ன மாமா உங்க ஆளுங்க. ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல..’ அவள் என்னைக் கேலி செய்தாள். செலிபிரிட்டி கிரிக்கெட்டில் நம் நடிகர்கள் சரியாக ஆடாததைத்தான் அப்படிச் சொல்லிக் காட்டினாள்.
யாரோ நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக நினைக்கிறார்கள். தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது. நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன் இதுமாதிரி செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள். ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள். இப்படி மானத்தை வாங்காதீர்கள். ரிஷிகாந்துக்கு தாணு சார் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார்.
இன்றைக்கு சினிமா மாறியிருக்கிறது. இன்றுள்ள சூழலில் ‘காட்டுப்புறா’வை வெளியிட முடியுமா? இன்றைக்குள்ள சினிமா பழையபடி வருமா? இன்று படம் ஓடவில்லை ஓடவில்லை என்கிறோம். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று நமக்கே தெரிவதில்லை ரசிகன் எப்படி வருவான்?
பழையபடி குறிப்பிட்ட திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகள் முறை மீண்டும் வர வேண்டும். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று ரசிகர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும். சினிமா சூழல் மாறி விட்டது.
முதலில் எங்களை விரட்டினார்கள். இனி உங்களையும் (தயாரிப்பாளர்களை ) விரட்டப் போகிறார்கள். இப்போது சினிமா புரோக்கர்கள் கையில் போய் விட்டடது. புரோக்கர்கள் தான் நம்மை ஆண்டு வருகிறார்கள். உற்பத்தி செய்பவர்கள் வாழ முடியவில்லை, விற்கிறவர்களும் வாழ முடியவில்லை. இது விவசாயத்தில் மட்டுமல்ல சினிமாவிலும் வந்து விட்டது. இது என்று மாறும்?” என்று ஆதங்கப்பட்டார் ஆர்.கே.செல்வமணி