சன்மானத் தொகை உயர்வு! – தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் நன்றி

Get real time updates directly on you device, subscribe now.

டிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன் வண்ணன் மற்றும் செயற்குழு உறுபினர்கள் கோவை சரளா, பசுபதி ஆகியோர்கள் ஜூலை 25-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர்களை நேரில் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபம் அமைத்து சிறப்பித்ததோடு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடவும் அரசாணை வெளியிட்டு தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்தமைக்கும், அரசு பொருட்காட்சிகளில் அரசின் கொள்கைகளை விளக்கும் நாடக குழுக்களுக்கு வழங்கி வரும் சன்மான தொகை ருபாய் 2௦௦௦-யிலிருந்து ரூபாய் 5௦௦௦-ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தமைக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் பொருட்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது நாடகக் குழுக்களுக்கு குறைந்தது 10 நபர்கள் நாடகத்திற்கு சென்றால் மட்டுமே அரசுப் பேருந்தில் பயண கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதை, அதற்கும் குறைவான நபர்கள் நாடகத்திற்கு சென்றாலும் கூட இது பொருந்தும் என்று மாற்றி தாங்கள் அரசாணை வெளியிட வேண்டும்.

அரசு மூலம் வழங்கும் சன்மானத் தொகையை நாடக கலைஞர்களின் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த பேருந்தில் செல்லும்போது அவர்களுடைய இசைக்கருவிகள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் நிகழ்ச்சிக்கான உடைமைகளை அரசுப்பேருந்தில் எடுத்துச் செல்ல முன்னுரிமை வழங்க வேண்டும்.

Related Posts
1 of 30

நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் மிகவும் குறைந்த வருமானத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். எனவே அவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த செல்லுவதற்கு அரசு பேருந்தில் வருடாந்திர இலவச பயண சலுகை வழங்குமாறும்.

60 வயதிற்கு மேல் உள்ள திரைப்பட, நாடக கலைஞர்கள் தொழில் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு மாதந்திர ஓய்வூதிய உதவித்தொகை வழங்கவேண்டும்.

தமிழ் திரைப்பட நூற்றாண்டு மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டில் நூறாண்டு கடந்த தமிழ் திரைப்பட கலைஞர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு திட்டமாக மாதந்திர ஓய்வூதிய தொகை வழங்கிட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளையும் நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த சந்திப்பின் பொழுது முதல்வரிடம் முன் வைத்தனர், முதல்வர் அவர்களும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார், இந்த சந்திப்பின்போது நடிகர் சங்க பொது மேலாளர் பால முருகன் மற்றும் செய்தி துறை செயலாளர் இரா.வெங்கடேசன் ஐ.ஏ.எஸ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் பொ.சங்கர் ஐ.ஏ.எஸ் ஆகியோர் உடனிருந்தனர்.