ரசிகர்களை நேரில் சந்திக்க ராகவா லாரன்ஸ் எடுத்த புது முடிவு!
தன் அபிமான ஹீரோக்களை சந்திப்பதற்காக ரசிகர்கள் சென்னைக்கு வருவார்கள். ஆனால் அவ்வளவு எளிதில் அந்த ஹீரோக்களை ரசிகர்களால் சந்திக்க முடியாது.
சமீபகாலமாக ரசிகர்கள் நேரில் சந்திக்க வந்தது போய், ஒவ்வொரு புதுப்படம் ரிலீசாகும் போதும் ரசிகர்களை அவர்களது ஊரிலேயே சந்திக்கச் செல்வது அதிகரித்து விட்டது.
சூர்யா முதல் சந்தானம் வரை எல்லா ஹீரோக்களும் இப்போதெல்லாம் தங்கள் படம் ரிலீசாகும் நேரத்தில் தமிழகம் முழுக்க ரசிகர்களை நேரில் சந்திக்கக் கிளம்பி விடுகிறார்கள்.
இருந்தாலும் சென்னைக்கு வந்து ஹீரோக்களை சந்திக்க ஆசைப்படும் ரசிகர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இந்த ‘ரசிகர்கள் சந்திப்பு’ விவகாரத்தில் புது முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது….
”என்னை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க, எனது ரசிகர்களில் ஒருவரான கடலூரை சேர்ந்த R.சேகர் சென்னை வரும்போது விபத்தில் இறந்து போனார்.
அவரது குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறியதுடன் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டேன். அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டது. அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். இனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம். வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன். சந்திக்கும் இடம் நேரம் தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும்.
அதன் முதல் கட்டமாக வரும் 7-ம் தேதி புதன்கிழமை சேலத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளேன்.”
இவ்வாறு ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.