இன்னொரு ‘இஞ்ச்’ இரக்கப்பட்டது ரஜினி மனசு!
பிரபு மகனோ, விஜயகுமார் மகனோ அறிமுகமாகிற படம் ரிலீசாகிறதெல்லாம் தவறாமல் ரஜினி தரப்பிலிருந்து ஒரு வாழ்த்துக் கடிதம் அவர்களை சென்றடையும் .
அவர்களும் அதை பெருமையோடு மீடியாக்களுக்கும் செய்தியாக கொடுத்து விட்டு தங்கள் பட விளம்பரங்களில் தொடர்ந்து ஒரு வாரமோ? பத்து நாட்களோ? வெளியிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள்.
அப்படிப்பட்ட அன்பு உள்ளம் கொண்டவர் வெள்ளத்தில் தத்தளித்த ரசிகர்களை ஒரு எட்டு பார்க்க வேண்டாம். அட ஒரு ஆறுதல் அறிக்கை கூடவா விடக்கூடாது என்பது தான் அவருடைய ரசிகனை பெற்றெடுத்த தாய், தந்தையரின் மனசை உறுத்தும் கேள்வி?
மலேசியாவில் ‘கபாலி’ படப்பிடிப்பில் இருக்கும் போதே சென்னைச் சோகச்செய்தி ரஜினி காதுகளை எட்டி விட்டது. உடனடியாக தனது ராகவேந்திரா ட்ரஸ்ட் வழியாக 10 லட்சம் ரூபாயை நிதியை நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்தார்.
அவர் செய்த அந்த நிதியுதவி அடுத்தடுத்து சமந்தா கொடுத்த 30 லட்சம் ரூபாய், நேற்று நடிக்க வந்த ஸ்ரீதிவ்யா கொடுத்த 10 லட்சம் ரூபாய்க்கு முன்னால் சோளப்பொறியாகி காற்றோடு கலந்து நாட்கள் பல ஆகி விட்டது.
கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி செய்யும் அதிகபட்ச உதவி இவ்வளவு தானா? என்கிற கேள்வி தொக்கி நிற்க ”யார் சார் சொன்னா ரஜினி உதவி பண்ணலேன்னு..? ராகவேந்திரா மண்டபத்துல போய் பாருங்க… வண்டி வண்டியா நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிக்கிட்டு இருக்காங்க… அதையெல்லாம் எந்தவித பப்ளிசிட்டியும் செய்யாம பண்ணினாப் போதும் என்று தலைவர் உத்தரவு போட்டிருக்கிறார் என்பது தான் அந்த பொருட்களை விநியோகம் செய்யும் ரசிகர்கள் சொன்ன வார்த்தைகள்.
இப்போது அதோடு நின்றுவிடவில்லை ரஜினியின் உதவும் கரங்கள்!
சென்னையில் கிடக்கும் டன் கணக்கிலான குப்பைகளை அள்ள தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சரியான தங்குமிடங்களை அரசாங்கமே கொடுக்கவில்லை. மாறாக அவர்களை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பள்ளிகளிலும், அடிப்படை வசதிகளே இல்லாத சாதாரண கட்டிடங்களிலும் தான் தங்க வைக்கப்பட்டார்கள்.
இந்தத் தகவல் ரஜினியின் காதுகளை எட்டவும் இன்னொரு ‘இஞ்ச்’ இரக்கப்பட்டிருக்கிறது அவருடைய மனசு.
துப்புரவு பணிக்கு நாமக்கல், மேலூர், கரூர், ஓசூர், சேலம், ராசிபுரம், ஆத்தூர், திண்டிவனம், தர்மபுரி, மேட்டூர், எடப்பாடி, பள்ளிப்பாளையம், திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து சென்னையை சுத்தம் செய்ய வந்திருக்கும் துப்புரவு தொழிலாளர்களை தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தங்க அனுமதித்திருக்கிறார்.
அதோடு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ராகவேந்திரா மண்டபத்தின் சார்பாக செய்து கொடுக்க கட்டளை இட்டிருக்கிறாராம்.
இஞ்ச் இஞ்சா இளகினாலும் மனசு செய்யுதே அதை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்!