‘சத்ரு’ படத்தை வெளியிடும் ‘ராட்சசன்’ தயாரிப்பாளர்
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கதிர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘சத்ரு’.
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ராகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் நவீன் நஞ்சுண்டான். ஆக்ஷன் த்ரில்லர் படமான 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகும். விறுவிறுப்பான திரைக்கதை, ஆக்ஷன் ரொமான்ஸ் கலந்த இந்த படத்தைப் பார்த்த உடனேயே தனது மைல்ஸ்டோன் மூவிஸ் சார்பில் வெளியிட முன் வந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு.
இதுகுறித்து இயக்குனரிடம் கேட்டபோது, ”தரமான, வெற்றி படங்களான ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’ என பார்த்து பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு ‘சத்ரு’ படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். குற்றவாளிகளாக, யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் இந்தப்படம்.
படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது” என்றார்.