சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இரண்டாவது படம் ரெடி!
‘கனா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் அடுத்த படத்தின் படப்பிடிப்பை முக்கால்வாசி முடித்து விட்டார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அவர் தயாரிக்கும் இந்த இரண்டாவது படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.
ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இதற்கிடையே படத்துக்கான டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.
படத்தைப் பற்றி இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலனிடம் கேட்டபோது, “ரியோ ஏற்கனவே ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் நபராக மாறிவிட்டார். நான் அவருடன் பணிபுரிந்த வரை, அவரின் அர்ப்பணிப்பும், சிறப்பானதை வழங்குவதில் அவரின் உறுதியையும் உணர்ந்தேன். அதே போலவே ஷிரினும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ராதாரவி சார் எங்கள் படத்தில் நடிக்க வந்தது எங்கள் அதிர்ஷ்டம்.
நாஞ்சில் சம்பத் சார் எங்கள் படத்துக்கு ஒரு வைரக்கல். நான் சில நேரங்களில் நாஞ்சில் சம்பத் சாரின் எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். நிச்சயமாக, ஆர்.ஜே. விக்னேஷ்காந்தும் அவர் பங்குக்கு நகைச்சுவை விஷயங்களை அளித்திருக்கிறார்” என்றார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியாகும்.