‘எஸ் 3’ 100 கோடி வசூல் : டைரக்டர் ஹரிக்கு டொயோட்டா ஃபார்ட்யூனர் காரை பரிசளித்த சூர்யா!
சூர்யா – டைரக்டர் ஹரி காம்பினேஷனில் சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று நல்ல வசூலையும் கொடுத்தது. இதனால் அதன் மூன்றாம் பாகத்தை ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘எஸ் 3’ என்ற பெயரில் ரிலீஸ் செய்தார்கள்.
ஏற்கனவே இரண்டு மூன்று தடவைகள் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளி தள்ளிப் போன ‘எஸ் 3’ ஒரு வழியாக பிப்ரவரி 9-க் தேதி ரிலீசாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரம் பெரும் குழப்ப நிலையில் இருந்து வருகிறது. இந்த இக்கட்டான நிலையிலும் ‘எஸ் 3’ படம் ரிலீசான ஆறே நாட்களில் 100 கோடியை வசூல் செய்திருப்பதாக அப்படத்தை தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் மட்டும் இந்த படம் 4 நாட்களில் ரூ.2.4 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தை விட ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் இந்த படத்தின் வசூல் அதிகம் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளில் இந்த படம் சாதனை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்து வருவதால் இன்னும் நான்கு வருடங்கள் கழித்து சிங்கம் படத்தின் நான்காம் பாகம் வெளியாகும் என்கிற புதிய தகவலை தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.
எஸ் 3 படம் வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் ஹரிக்கு டொயோட்டா ஃபார்ட்யூனர் கார் ஒன்றை பரிசாகக் கொடுத்திருக்கிறார் சூர்யா.