பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : பீட்டாவுக்கு சூர்யா 7 நாள் கெடு!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் உலகம் முழுக்க சூடு பிடித்திருக்கும் நிலையில் தடைக்கு காரணமான பீட்டாவுக்கு எதிராக திரையுலக நட்சத்திரங்களும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிற பீட்டாவை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென்று கருத்து தெரிவித்திருந்தார்.
அவரின் இந்தக் கருத்தைக் கேட்ட பீட்டா அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான நிகுஞ்ச் சர்மா தனது சிங்கம் 3 படத்தை விளம்பரம் செய்வதற்காகத்தான் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுகிறார் என்று பேசியிருந்தார்.
இதனால் வெகுண்டெழுந்த சூர்யா ரசிகர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் வசைபாடி வருகிறார்கள்.
அதோடு இந்தக் கருத்துக்கு மன்னிப்பு கேட்கும்படி பீட்டா அமைப்புக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் சூர்யா.
அதில் நான் என்னுடைய ‘சி 3’ படத்தை விளம்பரம் செய்ய தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுகிறேன் என்று பீட்டா அமைப்பு ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. முற்றிலும் தவறான இந்த செய்தி எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான் போராடி வருவது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆதலால் என்னைப்பற்றி தவறான செய்தியை பரப்பி வரும் பீட்டா அமைப்பு பகிரங்கமாக மனிப்பு கேட்க வேண்டும், நீங்கள் பரப்பிய செய்தி தவறானது என்பதை தெரிவிக்கும் வகையில் பிரஸ் ரிலீஸ் ஒன்றை 7 நாட்களுக்குள் வெளியிட வேண்டும். இவ்வாறு தனது வக்கீல் மூலம் பீட்டாவுக்கு கெடு விதித்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார் சூர்யா.
முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மதுரை, நெல்லையில் நடைபெற இருந்த தம்முடைய சி 3 பட விளம்பர நிகழ்ச்சிகளை சூர்யா ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.