விரைவில் ‘தனி ஒருவன் 2’
சூப்பர் ஹிட்டடித்த படங்களை பார்ட் 2 எடுப்பது தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்டாகி விட்டது.
‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.
சென்ற 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன்’ திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் படமான அந்தப்படம் வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள் ஆகி விட்டது.
அதையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் இயக்குனர் மோகன் ராஜா அந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த இரண்டாம் பாகத்தில் அவருடைய தம்பி ஜெயம் ரவி தான் ஹீரோ. அவர் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ரீமேக் படங்களையே தமிழ்சினிமா ரசிகர்களுக்கு தந்து வந்த ராஜாவை எல்லோரும் ரீமேக் ராஜா என்றே கிண்டலாக அழைத்து வந்தனர். அப்படிப்பட்டவருக்கு நேரடிப் படமும் இயக்கி, அதை வெற்றிப்படமாக்கும் திறமை இருக்கிறது என்று நிரூபித்த படம் தனி ஒருவன்.
அதேபோல இந்தப் படத்தில் ஹீரோ ஜெயம் ரவியின் மித்ரன் கதாபாத்திரத்தை விட, அரவிந்த் சுவாமியின் சித்தார்த் அபிமன்யூ என்ற வில்லன் கதாபாத்திரம் தான் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.