ஒரே நிறுவனத்தில் மூன்று படங்களில் நடிக்கும் ஜெயம் ரவி!
‘அடங்க மறு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘கோமாளி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.
இதையடுத்து அவர் நடிக்கப் போகும் அடுத்தடுத்த மூன்று படங்களை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இதுகுறித்து ஜெயம் ரவி கூறும்போது, “நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். நான் கவனித்த வகையில் இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களை கண்டு நான் வியந்திருக்கிறேன்.
அந்த வகையில், இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். நிச்சயமாக, ஆக்கப்பூர்வமான, வித்தியாசமான கதைகளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த திரைப்பட இயக்குனர்கள் இல்லையெனில் இது சாத்தியமில்லை. நிச்சயம் இந்த மூன்று படங்களும் வெற்றிப்படங்களாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
மேலும் தற்போது புதுப்படங்களை பற்றிய விவாதம் நடந்து வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்” என்றார் ஜெயம் ரவி.