திருட கற்றுக் கொடுக்க ஒரு பல்கலைக்கழகம் : அடேங்கப்பா ஜான் விஜய்!
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டுத் தேர்தலில் அதிகம் பணம் புழங்குவது வாடிக்கையாகி விட்டது.
மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கி தேர்தலில் ஜெயிப்பதற்காக தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை பரிமாற்றம் செய்கின்றன அரசியல் கட்சிகள். அப்படி மக்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருக்கும் பணத்தை நான்கு இளைஞர்கள் கொள்ளையடிக்க திட்டமிடுவதை திரையில் விறுவிறுப்புடன் காட்ட தயாராகியிருக்கும் படம் தான் ”தப்பு தண்டா”!
‘கிளாப்போர்டு புரொடக்ஷன்’ சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து இருக்கும் இப்படத்தில் சத்யா – சுவேதா கய் நாயகன் நாயகியாக நடிக்க, கூடவே மைம் கோபி, ஜான் விஜய், அஜய் கோஷ், ஈ. ராமதாஸ், மெட்ராஸ் ரவி, மகேந்திரன், நாகா, சஞ்சீவி, அஷ்மிதா பிரியா, ஜீவா ரவி, ஆத்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் பாலுமகேந்திராவின் சீடரான ஸ்ரீ கண்டனின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்துக்கு நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அ.வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், படத்தொகுப்பாளர் எஸ்.பி.ராஜா சேதுபதி (சதுரங்க வேட்டை), கலை இயக்குனர் பி சிவசங்கர் என பல வலுவான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
‘தேர்தல் நான்கு திருடர்கள், கதாநாயகியின் காதல் என மூன்று வெவ்வேறு கதைக்களங்களைக் இந்த ஒரே படத்தில் சுவாரஷ்யமாக முடிச்சுப் போட்டிருக்கிறாராம் இயக்குநர் ஸ்ரீகண்டன்.
”இந்தப் படத்தின் முதல்பாதி நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதி க்ரைம் கலந்த திகில் படமாகவும் நகரும். படத்தின் முக்கியமான சிறப்பம்சமே ஜான் விஜய் சாரோட கேரக்டர் தான். படத்துல திருடப்போற அந்த நான்கு இளைஞர்களுக்கும் ட்ரெயினிங் கொடுக்கிறதுக்கு ஒரு பல்கலைக்கழகத்தையே அவர் நிறுவியிருப்பார். திருட்டுத் தொழில்ல இணைஞ்சி இளைஞர்களை படிப்படியாக முழு நேர திருடர் ஆக்குவது தான் அவர் கேரக்டரோட முக்கியமான குறிக்கோள்.
அதே போல், அஜய் கோஷ் சாரின் கதாபாத்திரமும் படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. படத்தின் கதை பல்வேறு பரிமாணங்களில் செல்வதற்கு அவருடைய கதாபாத்திரம் தான் பாலமாக செய்லபடும். ‘விசாரணை’ திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயமாக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும்.
என்று சொல்லும் ஸ்ரீகண்டன் இப்படத்தின் நாயகன் சத்யா கூத்துப்பட்டறையில் இருந்து கண்டுபிடித்தாராம். படத்தின் தயாரிப்பாளரும் அவரே!
”இது என்னோட முதல் படம். என்ன தான் கூத்துப்பட்டறையில நடிப்பை கத்துக்கிட்டாலும் பத்தாம் வகுப்பு பரீட்சையை எழுதிட்டு ரிசல்ட்டுக்கு காத்துக்கிட்டு இருக்கும் போது எப்படி ஒரு படபடப்பு இருக்குமோ அப்படி ஒரு படபடப்போட தான் இருக்கேன். இதுவரைக்கும் வந்த நகைச்சுவை கலந்த திகில் படங்களில் இருந்தும் எங்களோட ‘தப்பு தண்டா’ திரைப்படம் வித்தியாசமான ட்ரீட்டா ரசிகர்களுக்கு அமையும்” என்கிறார் நம்பிக்கையோடு!
நம்பிக்கை அதானே எல்லாம்..!