‘கடைக்குட்டி சிங்கம்’ ஏற்படுத்திய தாக்கம்! – விவசாயப் பொருட்களுக்கு தமிழக அரசு சலுகை
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு !
சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் திரைப்படம் ”கடைக்குட்டி சிங்கம்”. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெண்களும், குழந்தைகளும் குடும்பம் குடும்பமாக திரளாக வந்து இப்படத்தை ரடித்து கொண்டாடி வருகிறார்கள்.
படத்தில் விவசாய நிலத்திலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் மூட்டைகளோடு வந்து பேருந்தில் அதை ஏற்றுவதற்காக காத்திருப்பார். அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்று விடுவார். உடனே நாயகன் கார்த்தி பேருந்தை இடைமறித்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறி அந்த பாட்டியை பேருந்தில் விவசாய பொருட்கள் கொண்ட அந்த மூட்டையோடு ஏற்றுவார்.
இந்தக் காட்சியின் பிரதிபலிப்பாக தற்போது தமிழக அரசு தற்போது இலவசமாக விவசாய பொருட்களை பேருந்தில் ஏற்றிச் செல்லலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது.
லாரி ஸ்டிரைக் காரணமாக விவசாயிகளுக்கு தமிழக அரசு இப்படி ஒரு சலுகையைக் கொடுத்திருந்தாலும், அது கடைக்குட்டி சிங்கம் படத்தில் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு கருத்தின் தாக்கத்தின் காரணமாக நடந்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.