‘தொட்ரா’ இயக்குனருக்கு ஜாதி அமைப்புகள் மிரட்டல்!
ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.
இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கு இப்படத்தில் பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கிக் கொண்டு போகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் தான்..
படம் வரும் செப்-7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தைப் பற்றிப் பேசிய இயக்குனர் மதுராஜ் சாதி அமைப்புகளிடமிருந்து தமக்கு மிரட்டல் வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவரிடம் கேட்டபோது… ”இந்தப்படம் ஆணவக்கொலை பற்றி பேசும் படம். அதே சமயம் படத்தை பார்த்த சென்சார் போர்டு படத்திற்கு ‘யு’ சான்றிதழும் கொடுத்து விட்டது. ஆனால் அடுத்த வாரம் படம் ரிலீசாக இருக்கும் இந்த நேரத்தில் இந்தப் படத்தின் கதை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. எங்களுக்கு படத்தை போட்டுக் காட்டியே தீரவேண்டும்.
இல்லாவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என பஸ் பிடித்து சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணியில் ரூம் போட்டு உட்கார்ந்துகொண்டு இயக்குனர் மதுராஜை மிரட்டி வருகிறார்களாம் சில ஜாதி அமைப்பு ஆட்கள். இது என்னடா புது சிக்கல், இவர்களை எப்படி சமாளிக்கப்போகிறோம் என செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணி வைத்து விட்டு திகிலடித்து கிடக்கிறார்” இயக்குனர் மதுராஜ்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரொம்பவே யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளன என்றால் அதற்கு காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில் தான். அதுமட்டுமல்ல புது இசையமைப்பாளர், புது டீம் என்கிற பாகுபாடு பார்க்காமல், கேட்டதும் ஒப்புக்கொண்டு நடிகர் சிம்பு இந்தப் படத்திற்காக ‘பக்கு பக்கு’ என்கிற பாடலை பாடியுள்ளார். அந்தப்பாடல் யூ டியூப்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரிலீசுக்கு பின்னால் இந்தப்படம் நிச்சயம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.