இதுவும் ஆவிபடம் தான்… ஆனா பயமுறுத்தாது, பாசம் காட்டும்!!!
ஆவிகளை இன்னும் என்னென்ன வகையறாக்களில் ஸ்க்ரீனில் காட்டலாம் என்று ரூம் போட்டு யோசிக்க வேண்டிய கட்டாயம் தமிழ்சினிமா இயக்குநர்களுக்கு வந்து விட்டது.
அந்தளவுக்கு காமெடியில் ஆரம்பித்து பயங்கர பயமுறுத்தல் வரை ரசிகர்கள் பல ஆவிகளை பார்த்து சலித்து விட்டார்கள்.
அப்படி சலித்த ரசிகர்களுக்கு வித்தியாசமான பேய்ப்பட ரசனையை தரும்விதமாக தயாராகியிக்கும் படம் தான் உனக்கென்ன வேணும் சொல்லு. ஜீனா பிக்சர்ஸ் சார்பாக என்.சண்முகசுந்தரம், கே.முகமது
யாசின் தயாரிக்க, பல ஹாலிவுட் படங்களை வெளியிட்டு வரும் ஆரா சினிமாஸ் தங்களது முதல் தமிழ்ப்படமாக இந்தப்படத்தை வெளியிடுகிறது. எம்.ஆர்.கே கதைக்கு திரைக்கதை, வசனம் எழுத
இயக்குயிருக்கிறார் ஸ்ரீநாத் ராமலிங்கம் என்கிற 23 வயது இளைஞர். இவர் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் திரைப்பட நுணுக்கங்களை கற்று கரை கண்டவராம். அந்த அனுபவத்தை வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இதுவரை எத்தனையோ விதமான ஆவிகளைப் படங்களில் பார்த்தாயிற்று. திகில் தொடங்கி, சிரிப்பு வரை தொடரும் ஆவிகளில் அடுத்து வரவிருப்பது ‘டெய்சி’ என்ற ஐந்து வயதுக் குழந்தையின் ஆவி.
இதன் சுவாரஸ்யம் என்னவென்றால் இது பிறந்து ஐந்து வயது வரை வளர்வதுதான்.
மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, சிவசரவணன் இசையமைத்திருக்கிறார். ‘டெய்சி’யாக குழந்தை ‘அனு’ நடிக்க, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்லின் பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
வயிற்றில் கருவாக இருக்கும் ‘டெய்சி’ என்கிற குழந்தை ஆவி தனக்கு 5 வயது ஆகும் வரை அமைதியாக காத்திருந்து அதன்பிறகு பழி வாங்கக் கிளம்புகிறதாம்.
இப்போ இருக்கிற ஆவி, பேய் படங்களோட ட்ரெண்ட்டுக்காக நாங்க எடுக்கல. ஏன்னா ஒரே மாதிரியான ஆவி படங்களைப் பார்த்து ரசிகர்கள் ரொம்ப டயர்ட்டாகியிருப்பாங்க. இந்தப் படத்துல
ஆவிங்கிற விஷயத்தை முன்னிலைப் படுத்தாம ஃபேமிலி, செண்டிமெண்ட், பாசம் ஒரு குடும்பக்கதையாகத்தான் எடுத்திருக்கிறோம். திருமணம் செய்யாமலேயே லிவிங் டூகெதர் வாழ்க்கை நடத்தும் இருவருக்கு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு வரும் பாதிப்புகள் என்ன? அதனால் அந்தக் குழந்தையின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதையும் படத்துல சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
படம் பார்க்கிற ரசிகர்கள் பயப்பட மாட்டாங்க. மாறாக அந்த குழந்தை ஆவி மேல இரக்கப்படுவாங்க… என்றவர் இது ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கிறார்.
அடடே இது ரொம்ப புதுசா இருக்கே…?