சூர்யா ஏன் இந்தப் படத்தை தயாரிக்கணும்? – விழா மேடையில் கண் கலங்கிய டைரக்டர்!
2016ம் ஆண்டு வெளியான ‘உறியடி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘உறியடி 2’ என்ற பெயரில் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கிறார் புதுமுகம் விஜயகுமார். இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்ர்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் விஜயகுமார், நடிகர் சூர்யாவுடனான தனது உறியடி 2 படப்பிடிப்பு அனுபவத்தை விழா மேடையில் பகிர்ந்தார். அப்போது அவர் மேடையிலேயே கண் கலங்கினார்.
“நடிகர் சூர்யா ஏன் இந்த ‘உறியடி 2’ படத்தை தயாரிக்க வேண்டும், என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள், கேட்க நினைக்கிறார்கள். நடிகர் சூர்யா மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதன். அவரது நம்பிக்கையை இந்த ‘உறியடி 2’ படம் நிச்சயம் காப்பாற்றும். இந்தப்படம் மக்களுக்கான படம் என்ற நம்பிக்கையும் காப்பாற்றும்.
தமிழ் திரையுலகிலுள்ள ஒவ்வொரு இயக்குனருக்கும், ஒவ்வொரு நடிகருக்கும் இந்த நிறுவனத்தில் படம் பண்ண வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஏவிஎம் நிறுவனத்தை போல் ஒரு படத்தை தொடங்கியது முதல் அதனை திரைக்கு கொண்டுவந்து கொண்டு வருவது வரை சரியானமிக சரியான திட்டமிடல் இந்த நிறுவனத்தில் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் 200 படங்கள் வருதுன்னா, 150 படங்களில் பிரச்சனை இருக்கும். அந்த வலி…” என்றவர் திடீரென்று குனிந்து கண் கலங்கினார். பின்னர் சுதாரித்தவர் “சாரி, இப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கல. பிரச்சனையின் வலி எனக்கு நல்லா தெரியும். ஆனா இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லாம பார்த்துகிட்ட 2டி நிறுவனம் இன்னும் நிறைய படங்கள் பண்ணனும்”.
படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றியை கூறி படைப்பை எனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது, ஒரு கலவர காட்சியை படமாக்கினோம். அப்போது உதவி இயக்குனர்களை போலீசாக நடித்தவர்களிடம் உண்மையான தடியைக் கொடுத்து அடிக்க வேண்டும் என்று சொன்னோம்.
அதேபோல் உதவி இயக்குனர்கள் யார் என்பதையும் போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, காட்சியின் போது உதவி இயக்குநர்களிடம் ‘கையைத் தூக்குங்க’ என்று ஒரு சைகையை சொல்லியிருந்தோம்.
ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது அந்த கூட்டத்தில் உள்ளவர்கள், துணை நடிகர்கள், ஒவ்வொருவரும் அவர்கள் கையை தூக்கி அந்த அடியை வாங்கிக் கொண்டு இந்த காட்சியை உயிர்ப்புடன் படமாக்க உதவி புரிந்தார்கள். அதற்காக யாருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்பவில்லை. இது அனைவருக்குமான படம் என்பேன். அத்துடன் இந்த படத்திற்காக நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும், புத்திசாலித்தனத்தையும் 100 சதவீதம் மதிக்கும் ஒரு படமாக உறியடி-2 இருக்கும்.” என்றார்.