‘என்.ஜி.கே’ ரிசல்ட்? சூர்யா ஷாக்
”அஞ்சான்” படத்திலிருந்து தொடர் தோல்விகளை கொடுத்து வந்த சூர்யா ரொம்பவே நம்பியிருந்த படம் ”என்.ஜி.கே”.
செல்வராகவன் இயக்கத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நாயகிகளாக நடித்திருந்தனர்.
பொதுவாக செல்வராகவன் படங்கள் என்றாலே விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இந்தப்படம் 6 வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வரும் படமென்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்ற வாரம் ரிலீசான ‘என்.ஜி.கே’ படம் தோல்விப் படங்களின் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.
படத்தை ரிலீசான முதல் நாளில் தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் படம் புரியவில்லை, கிளைமாக்ஸ் படு சொதப்பல், திரைக்கதை மோசம் என்று விமர்சித்தனர். சோஷியல் மீடியாவில் படம் குறித்தான எரிச்சல் மீம்களும் அதிகளவில் வெளியாகின.
உடனே சுதாரித்துக் கொண்ட டைரக்டர் செல்வராகவன் ”படத்தை கூர்ந்து கவனியுங்கள். அதில் கண்ணுக்கு புலப்படாத சில குறியீடுகள் உள்ளன” என்று தெரிவித்தார். ஆனாலும் படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
சாமாயனுக்கும் புரியும்படி ஒரு படத்தின் திரைக்கதை அமைந்திருக்க வேண்டும். அது இந்தப் படத்தில் மிஸ் ஆகியிருந்ததே என்.ஜி.கே தோல்விக்கு காரணம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
இதற்கிடையே என்.ஜி.கே படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈட்டை சரிகட்டச்சொல்லி சென்னையில் முகாமிட்டிருக்கிறார்களாம்.
சரிந்து போன தனது மார்க்கெட்டை தூக்கி நிமிர்த்து என்று எதிர்பார்த்த என்.ஜி.கே படமும் தோல்விப்படமாகி விட்டதில் ரொம்பவே அப்செட்டாகியிருக்கிறாராம் ஹீரோ சூர்யா.