மயில்சாமி மகனின் “வாய்க்கா தகராறு”!
ராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு “வாய்க்கா தகராறு” என்று பெயரிட்டுள்ளனர்.
மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்க, இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார்.
நாயகிகளாக வர்ஷிகா நாயகா, நைனா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் பவர் ஸ்டார், சிங்கம் புலி, மனோபாலா, போண்டாமணி, கராத்தே ராஜா, சுரேகா ரேவதி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை – தேவா, சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, கஜினி குபேரன், கதை வசனம் தயாரிப்பு – பி. முருகவேல்
திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுரேஷ் கே வெங்கிடி. இவர் மலையாளத்தில் இயக்குனர் கே.மது, சுதி சங்கர் போன்ற இயக்குனர்களிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர் இவர் இயக்கும் முதல் படம் இது.
படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே வெங்கிடியிடம் கேட்டோம்.. ”என்று தணியும்” என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும் “யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை” படத்தில் நடித்த விஜய் ராஜ் இருவரையும் வைத்து நான் முதல் படத்தை இயக்குகிறேன். இது ஒரு செண்டிமெண்ட் கதை. இதை கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம்..
ஒரு ஆண் சூழ்நிலை காரணமாக அவனுக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு ஆண் மகன்கள். சக்களத்தி சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய பெண்கள் ஒற்றுமையாக வாழ, சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டிய சகோதரர்கள் மோதிக் கொள்ள இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதா இல்லையா என்பது தான் கதை.
படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை திருப்போரூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமப்புற வாழ்வியலை அப்படியே பதிவு செய்துள்ளோம். கிராமிய பாடல்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி தேவா சாருக்கு. தூள் கிளப்பி இருக்கிறார். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது” என்றார்.