“வள்ளியம்மா பேராண்டி” இசை ஆல்பம் வெளியீட்டு விழா!
தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் “வள்ளியம்மா பேராண்டி”. இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தெருக்குரல் அறிவு பேசியதாவது…
இசைத்துறைக்கு வந்த பிறகு குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவில்லை, இன்று இங்கு அப்பா என்னைப் பற்றி பேசியது மகிழ்ச்சி. என் வளர்ச்சிக்கு முழு காரணமாய் இருக்கும் அண்ணன் பா ரஞ்சித் அவர்களுக்கு என் நன்றிகள். நான் படிக்கும் காலத்தில் நான் கேட்ட குரல் ஆண்டனி தாசன் அண்ணன் குரல் தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வந்தது மகிழ்ச்சி. இண்டிபெண்டட் மியூசிக் உள்ளே நான் வரக் காரணமே காஸ்ட்லெஸ் கலக்டிவ் மூவ்மெண்ட் தான். அது எனக்கு மட்டுமல்ல, பல கலைஞர்களுக்கு அடையாளம் தந்தது அந்த காஸ்ட்லெஸ் கலக்டிவ் தான், அதை உருவாக்கிய அண்ணன் பா ரஞ்சித்துக்கு நன்றி. வள்ளியம்மா பேராண்டி என்பதில் வள்ளியம்மா வரலாறு மிக முக்கியம். பிரிட்டிஸ் காலத்தில் இங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்று தேயிலைத் தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு, பல கஷ்டங்களைத் தாண்டி, இங்கு மீண்டும் வந்து வாழ்வை எதிர்கொண்ட வள்ளியம்மாயின் வரலாறு மிக முக்கியம் என் அடையாளம் அது தான். பொதுவாகப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இங்கே என் போல் வாழ்பவர்கள் எப்போது கொல்லப்படுவார்கள் என்றே தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த உலகில் என்னை அடையாளத்தைப் படுத்தும் முயற்சியாகத் தான் வள்ளியம்மா பேராண்டி ஆல்பத்தை உருவாக்கினோம். இந்த குழுவில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு என் நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு முன் பயணித்த அத்தனை கலைஞர்களுக்கும் என் நன்றிகள். பல பாடல்கள் நம் ஆயாக்களிடம் இருந்து தான் வந்தது, ஆனால் அந்த அடையாளத்தை நாம் மறந்து விடுகிறோம். இந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்டால் நாம் வேரற்ற மரமாக வெட்டி வீழ்த்தப்படுவோம். எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் போது நான் பேசியது பிரச்சனையானது. உன் ஆயா பற்றி பாடவா வந்துள்ளாய் எனக் கேட்டபோது, ஆம் என் ஆயா பற்றிப் பாடத்தான் நான் வந்துள்ளேன் என்றேன். என் மீதான கேள்விகளுக்கான பதில் தான் இந்த ஆல்பம். நாம் வாழும் இன்றைய உலகில் அன்பை மீட்டெடுப்போம் நன்றி.