வட்டார வழக்கு- விமர்சனம்
ஒரு மண்மனம் வீசும் சினிமா
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இரு குடும்பங்கள். அந்தக் குடும்பங்களுக்குள் பெரும்பகை கொளுந்துவிட்டு எரிகிறது. இந்நிலையில் ஹீரோ ஒரு குடும்பத்தை சூறையாடுகிறார். அதனால் அவர் தலைக்கு மேல் அருவாள் தொங்குகிறது. தலை தப்பித்ததா? என்பதாக படத்தின் மீதிக்கதை விரிகிறது
நடிகர் சந்தோஷ் எதார்த்தம் மாறாத நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். சின்னச் சின்ன உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதம் சிறப்பு. ரவீனா ரவிக்கு இந்தப்படம் கரியர் பெஸ்ட் எனலாம். மிகவும் தேர்ந்த ஒரு நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். படத்தின் இன்னொரு ஆகப்பெரும் பலம் படத்தில் நடித்துள்ள மதுரை மைந்தர்கள். எந்தச் சினிமா அறிமுகமும் இல்லாத அவர்கள் மிகையற்ற நடிப்பால் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்!
இசை இளையராஜா.. இசையே இளையராஜா தானே! அவரது பின்னணி இசை கதையின் வீரியத்தை மேலும் அதிகப்படுத்தி ரசிகானுபவத்தை வழங்கியுள்ளது. ஒளிப்பதிவு நம்மை மதுரை சோழவந்தான் கிராமத்திற்கு 1987-காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது.
மனித உறவுகளுக்குள் நடக்கும் பகை பாசம் துரோகம் ஆகியவற்றை வைத்தே ஒரு நல்ல கலைப்படைப்பைத் தந்துள்ளார் இயக்குநர் பொண்ணுசாமி ராமச்சந்திரன். ஒரு தேர்ந்த கதை சொல்லியாக முதல் படத்திலே முத்திரைப் பதித்துள்ளார். இன்னும் சில பல உப்புகாரம் சேர்த்திருக்கலாம். வட்டார வழக்கு வாட்டமில்லா சொல்லாட்சி
3.25/5