”வேற யாரையும் இந்தக் கதைக்கு ஹீரோவா யோசிக்க முடியல..!” – விஜய் ஆண்டனியை சிலாகிக்கும் அண்ணாதுரை டைரக்டர்

தமிழ்சினிமாவில் மினிமம் கியாரண்டி ஹீரோக்கள் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் அதில் விஜய் ஆண்டனியின் பெயரும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
அதனாலேயே அவருடைய ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் அவருடைய நடிப்பில் தயாராகியிருக்கும் அண்ணாதுரை படத்துக்கும் முன்னெப்போதும் இல்லாத எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
விஜய் ஆண்டனி நடிக்க, ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த ‘அண்ணாதுரை’, வரும் நவம்பர் 30-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
படம் வெளியாக இருப்பது எனக்கு உற்சாகமாகவும், அதே சமயத்தில் பதட்டமாகவும் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு கலவையான உணர்வுக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். சினிமா கலையின் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த கதையை எனது முதல் படமாக இயக்கியதை நான் பெருமையாக நினைக்கிறேன்.
சினிமா கலையை கற்றுக் கொள்ள பல்வேறு இயக்குனர்களிடத்தில் வேலை செய்திருக்கிறேன், அவர்களுக்கு நன்றி. வசந்தபாலனிடம் கிளாஸாக எப்படி படம் எடுப்பது, சுசீந்திரனிடம் அழுத்தமான கமர்ஷியல் படம் எடுப்பது எப்படி, நகைச்சுவையை பூபதி பாண்டியனிடமும், குறிப்பிட்ட நேரத்துக்குள் படம் எடுப்பதை எழில் சாரிடமும் கற்றுக் கொண்டேன். அண்ணாதுரை கதைக்கு விஜய் ஆண்டனியை தவிர்த்து யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை.
பல நடிகர்களிடம் காண முடியாத, நுட்பமான அதே சமயம் அழுத்தமான பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஆண்டனியால் முடியும். அண்ணாதுரை படத்துக்கு அவரின் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருந்தது. நடிகராக, இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு எடிட்டராகவும் தன் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்த ஒத்துழைப்பால் படம் சிறப்பாக வந்திருக்கிறது. அண்ணதுரை தலைப்புக்கேற்ற வகையில் ஒரு பவர்ஃபுல் படமாக இருக்கும். வாழ்நாளில் மறக்க முடியாத நவம்பர் 30 ரிலீஸுக்கு காத்திருக்கிறேன்” என்றார் அறிமுக இயக்குனர் சீனிவாசன்.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா சம்பிகா, மஹிமா மற்றும் ராதாரவி,காளி வெங்கட், நளினிகாந்த், ஜீவல் மேரி, ரிந்து ரவி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். தில்ராஜ் ஒளிப்பதிவில், ஆனந்த மணி கலை இயக்கத்தில், ராஜசேகர் சண்டைப்பயிற்சியில் தயாராகியுள்ள இந்த படத்துக்கு சக்திவேல் பாடல்கள் எழுதியுள்ளார், கவிதா, சாரங்கன் ஆடை வடிவமைப்பை செய்திருக்கிறார்கள்.