வளரும் போதே நண்பர்களையும் வளர்த்து விடுகிறார் சுசீந்திரன்! : ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா புகழாரம்
‘வில் அம்பு’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.
விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன், இந்த மேடை எனக்கு முதல் மேடை போல் உள்ளது, ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் நிற்கும் போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அதே அளவுக்கு எனக்கு இப்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இந்த ‘வில் அம்பு’ படம் எங்கள் பதிநான்கு வருட நட்பின் சாட்சி என்றார் இயக்குநர் சுசீந்திரன்.
கவிப்பேரரசு வைரமுத்து பேசும் போது , இயக்குநர் சுசீந்திரன் தன்னை ஒரு சிறந்த இயக்குநராக நிரூபித்துவிட்டு, தற்போது சுசீந்திரன் ஆலமரமாக இருந்து பல விழுதுகளை உருவாக்கி வருகிறார். அவர் நட்புக்கு செய்யும் செயல் மிகப்பெரியது. ஆற்றல் மிகுந்த தன் நண்பர்களுக்கு வெளிச்சம் தந்து கொண்டு இருக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் ஆழுக்கை அழகாக காட்டி வருகிறார்கள். இது நிச்சயம் பாராட்ட தக்க ஒரு விஷயம். எனக்கு அழுக்கை அழகாக காட்டும் இந்த விஷயம் மிகவும் பிடித்துள்ளது. இந்த படம் நிச்சயம் மிக பெரிய வெற்றி பெரும் என்றார்.
நடிகர் சூரி பேசும்போது , நான் சுசீந்திரன் அண்ணாவின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்தவன். நான் மட்டும் அல்ல விஷ்ணு உள்ளிட்ட பலர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக வந்தவர்கள் தான். இப்போது அண்ணன் தயாரித்துள்ள வில்அம்பு படத்தில் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார் , அனிருத் , டி.இமான் ஆகியோர் பாடியுள்ளனர். வெற்றி இசையமைப்பாளர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடி இருப்பதே படத்துக்கும் , பாடலுக்கும் கிடைத்த மிகபெரிய வெற்றியாகும் என்றார்.
படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் ”இந்த படத்தின் இசையமைப்பாளர் நவீனின் பாடல்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த படம் வெற்றி பெற அவர் முக்கிய காரணமாக இருப்பார்” என்பதை கூறிவிட்டு இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, ”பெரும்பாலும் நான் சினிமா விழாக்களுக்கு வருவதில்லை. நாம் ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு மேடையில் பேசிவிட்டு அது பிரச்சனையாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி. அதே நேரம் தொடர்ந்து விழாக்களை புறக்கணித்து வந்தாலும் பாரதிராஜாவுக்கு வயசாயிடுச்சுன்னு சொல்வாங்க… அதனாலும் வர ஆசையாக இருக்கும். ஆனால் இந்தப்படத்தின் விழாவுக்கு நான் வந்தே ஆக வேண்டும். ஏனென்றால் சுசீந்திரன் தான் என்னை முதன் முதலில் நடிக்க வைத்தார். அவர் மிக சிறந்த இயக்குநர் என்பதில் மாற்று கருத்தே இல்லை.
ஜி.வி.பிரகாஷ் உடன் நானும் அமர்ந்திருப்பது, நானும் அவரை போல் வெர்ஜின் பாய் தான் என்பதை நிரூபிக்க முடிகிறது. இப்போது வருகிற இயக்குநர்களைப் பார்த்து நான் பிரமித்துப் போகிறேன். இப்போது பாடல்களை லிப் அசைக்காமல் எடுக்கிறார்கள் அது எனக்கு தவறாகப் படுகிறது. லிப் அசைவோடு எடுக்கும் போது தான் ஒரு நடிகனின் நடிப்பும் வெளிவரும். சிலர் வளர்ந்த பிறகு தங்களைச் சுற்றியுள்ளவர்கள் வளர உதவி செய்வார்கள்.
வைரமுத்து சொன்னது போல சுசீந்திரன் இப்போது தான் ஆலமரம் போல வளர ஆரம்பித்திருக்கிறார். அதற்குள் கிளைகளை பரப்ப ஆரம்பித்து விட்டார். தான் வளர்ந்த பிறகு நண்பர்களுக்கு உதவி செய்ய நினைக்காமல் தான் வளரும் போதே நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர உதவி செய்கிறார். அந்த நல்ல மனசுக்கு வாழ்த்துகள். இந்தப்படம் நட்பின் அடையாளமாக, குடும்பப்படமாக வந்திருக்கிறது. அதற்காகவே மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” என்று புகழாரம் சூட்டினார் பாரதிராஜா.