‘குழந்தைகளை விளையாட விடுங்கள்’ – இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள்
ஒவ்வொரு படத்திலும் சமூகப் பிரச்சனைகளை தனக்கே உரிய பாணியில் கமர்ஷியல் கலந்து சொல்வதில் கை தேர்ந்தவர் இயக்குனர் சுசீந்திரன்.
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் இந்த வார ரிலீசாக வரும் படம் தான் ஜீனியஸ்.
சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சமகால கல்வி குறித்து கவலைப்பட்டிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
படத்தை பற்றி அவரிடம் கேட்டபோது, ”பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன். ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்து கொண்டு டீ ஆர்டர் செய்து அதை குடித்து விட்டு பணம் கொடுக்காமல் திரும்பி சென்றார். அப்படி சென்ற அவரிடம் கடைக்காரர் பணம் கேட்ட போது அவரிடம் பயங்கரமாக கோபப்பட்டு நாளை தருகிறேன் என்று கத்தி கூறினார். அந்த கோபம் பயங்கரமானதாக இருந்தது.
நல்ல படித்த, பெரிய வேலையில் உள்ள நபர் போல் தோற்றமளித்த அவரின் மன உளைச்சலுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது தோன்றிய கதை தான் இப்படத்தின் கதை.
இக்கதையை நான் விஜய், அல்லு அர்ஜுன் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல ஹீரோக்களிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இக்கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் இக்கதையில் ஹீரோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இக்கதைக்கான ஹீரோவை படத்தின் கதையே முடிவு செய்தது.
இப்படம் கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழில் வெளிவந்த படங்களில் கல்வி மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் ‘ஜீனியஸ்’ முக்கியமான படமாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு கதையை எழுதி விட்டு அதை படமாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும் எனக்கும் அந்த ஆசை இருந்தது அது ரோஷன் மூலம் நிறைவேறியுள்ளது.
ரோஷன் நல்ல தயாரிப்பாளர். விரைவில் நல்ல நடிகராக அனைவராலும் அறிப்படுவார். இன்று ஆங்கில வழி கல்வி முக்கியமான ஒன்றாகி விட்டது. எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது. நான் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வி தான் கற்றேன்.
நமது அரசாங்கம் ஆங்கில வழி கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் அனைவராலும் ஆங்கிலம் எளிதாக பயின்று பேச முடியும். இன்று ஆங்கிலம் மிகவும் தேவையான ஒன்றாகி விட்டது.
காலை எழுந்தவுடன் படிப்பு, மாலையில் கனிவு கொடுக்கும் நல்ல விளையாட்டு என்பது தான் முன்பெல்லாம் இருந்தது. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லாமல் ஆகி விட்டது. அவர்கள் உடம்பில் வெயிலே படுவதில்லை. அந்தளவுக்கு எந்நேரமும் படிப்பு படிப்பு என்று அவர்களை பெற்றோர்கள் இம்சிக்கிறார்கள். அதை இந்தப் படத்தில் படிப்போடு, விளையாட்டும் தேவை என்பதை மிகவும் ஆழமாக கூறியுள்ளோம்” என்றார் இயக்குனர் சுசீந்திரன்.