“வால்டர் சமுதாயத்திற்குத் தேவையான படம்”

ஒருபடம் பற்றி அப்படம் சார்ந்தவர்கள் சொல்வது கொஞ்சம் மிகையாகத் தான் இருக்கும். ஆனாலும் வால்டர் படம் கவனிக்கப்படும் என்று பலராலும் கணிக்கப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்து
நடிகை ஷ்ரின் கான்ஞ்வாலா கூறியதாவது…
“இயக்குநர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையை கூறியபோது கலந்து கட்டிய உணர்வுகளால் பிரமித்து போனேன். பல வகை திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக திரைக்கதை இருந்தது. மேலும் படத்தின் கதையில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது என்பது அதிர்ச்சி தருவதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக நான் சமூக நோக்குடன் கூடிய அழுத்தமான படங்களில் தொடர்ந்து பணிபுரிகிறேன். அது மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. படத்தின் மையம் மிக அழுத்தமான விடயத்தை பதற்றம் தரும் வகையில் கூறுவதாக இருந்தாலும், இயக்குநர் U.அன்பு படத்தில் ரொமான்ஸும் சரியான அளவில் வருவது போல திரைக்கதை அமைத்துள்ளார்.
சாதாரணமாக இந்த வகை திரைப்படங்களில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது ஆனால் இப்படத்தில் இயக்குநர் எனக்கு மிகச்சிறந்த கதாபாத்திரம் தந்துள்ளார். இப்படியான முக்கியதுவம் மிகுந்த படைப்பில் நானும் பங்குகொண்டதில் மகிழ்ச்சி. சிபிராஜ் ஒரு அற்புதமான நடிகராக, எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். படப்பிடிப்பில் பல நேரங்களில் வசனங்களை சரியாக உச்சரிக்க, நான் அதிக நேரம் எடுத்து கொள்வேன். அம்மாதிரியான நேரங்களில் பொறுமையாக உடனிருந்து உதவி செய்வார். இப்படத்தில் தமிழின் சிறந்த நடிகர்களான நட்டி, சமுத்திரகனி, ரித்விகா மற்றும் பலருடன் நடித்தது ஒரு மிகச்சிறந்த அனுபவம். படத்தின் வெளியீட்டிற்காக பேரார்வத்துடன் காத்திருக்கிறேன். இப்படம் ரசிகர்களை கமர்ஷியலாக கவருவதுடன் சமுகத்திற்கான தேவையான முக்கியமான கருத்தை கூறுவதாகவும் இருக்கும்” என்றார்.