உயர் கல்வியின் அவலங்களை தோலுரிக்கும் எய்தவன்!
கமர்ஷியல் படம் எடுத்தால் அது ரசிகர்களைப் போய்ச் சேரும். தயாரிப்பாளர்களின் பர்சும் நிரம்பும் என்பது யதார்த்தம்.
ஆனால் அதில் சமூகப் பிரச்சனைகளையும் டச் பண்ணியிருந்தால் அந்த மாதிரியான நல்ல படங்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவே அலாதியானது.
அப்படி கல்வித் துறையின் கருப்புப் பக்கங்களை கமர்ஷியலாகக் கொண்டு கலையரசன் – சாத்னா டைட்டஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் தான் ‘எய்தவன்’. மத யானைக் கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாரின் சீடரான சக்தி ராஜசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஆடுகளம் நரேன், வேலா ராமமூர்த்தி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், சான்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பார்தவ் பார்கோ இசையமைத்துள்ளார். பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நம் நாட்டில் கல்வி என்பது ஏழைகளுக்கு மட்டுமல்ல, பணக்காரர்களுக்கும் பெரிய பிரச்சனையாகத்தான் இருக்கிறது. ஒட்டு மொத்த கல்விச் சூழலில் இங்கே தவறாக இருக்கிறது. அப்படிப்பட்ட கல்வியால் பாதிக்கப்படுகிறவர்களைப் பற்றிய படம் தான் இந்த எய்தவன் என்று சொல்லும் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இந்தப் படத்தின் கதையை எழுதுவதற்காக மருத்துவத் துறையைச் சார்ந்த பெரும் வல்லுனர்கள் பலரிடம் அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டு திரைக்கதையில் சுவாரஷ்யம் கூட்டியிருக்கிறார்.
படத்தில் கலையரசன், சாத்னா டைட்டஸ் மட்டுமில்லாமல் மொத்தம் 16 கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறன. இந்த 16 கதாபாத்திரங்களுக்குமே கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
தற்போதைய சூழலில் கல்வி எந்த வகையில் இருக்கிறது என்பதை பற்றி சொல்லியிருந்தாலும் வெளிப்படையாக எந்த கல்வியாளர்களைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் காட்சிப்படுத்தவில்லை. ஆனால், கல்வியால் மக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறோம்.
ஏழை, பணக்காரர், நடுத்தர வர்க்கத்தினர் என்று அனைத்து தரப்பினரும் கல்வி முறையால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மூன்று கதாபாத்திரங்கள் மூலமாக விவரித்திருக்கிறோம். மூவருமே வெவ்வேறு வகையில் பாதிக்கப்பட்டாலும், அவர்களது பாதிப்புக்கான ஒரே காரணம் கல்வி என்பதைத்தான் பரபரப்பாக நகரும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.